
சென்னை அமைந்தகரையில் நடைபெறவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி எதிரே செயின்ட் ஜார்ஜ் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் லிங்க்ஸ் கன்வென்ஷன் மையத்தில் வருகிற அக்டோபர் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டமானது நடைபெறவுள்ளது. இதில் திமுக மாவட்ட செயலாளர்கள், செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ள நிலையில், பிரம்மாண்ட பந்தல்களும் அமைக்கப்படவுள்ளன.
இதுதவிர கூட்டத்தில் திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கலும் அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோரும் போட்டியிட மனுதாக்கல் செய்ய உள்ளனர். துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியதால் காலியாக உள்ள அப்பதவிக்கு கனிமொழி கருணாநிதி போட்டியிடுவார் என தெரிகிறது.
இந்தநிலையில் திமுக பொதுக்குழு கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த கட்சி தலைமை திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.