
சிதம்பரம் நடராஜர் கோயிலில் திரளான பக்தர்கள் சூழ தேரோட்டம் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சனம் கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து எட்டு நாட்களாக பஞ்சமூர்த்தி சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.
இங்கு ஆண்டுக்கு இரு முறை தேரோட்டம் மற்றும் தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் திருமஞ்சனம் விழாவும் நடைபெறுவதும் வழக்கம்.
அதன்படி, முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட ஐந்து தனி தனி தேர்களில் விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் முக்கிய வீதிகள் வழியாக பவனியாக சென்று கொண்டிருக்கின்றனர்.
மேலும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் ஆயிரத்து 160 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.