சென்னையில் மயங்கி விழுந்த ஆசிரியை! "ஸ்டாலின் அரசின் ஏமாற்று வேலை" - விடாமல் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்

தாங்கள் குற்றவாளிகள் அல்ல, ஆசிரியர்கள் என்பதைக்கூடப் பாராமல் காவல்துறையினர் தங்களை ஒரு தீவிரவாதியைப் போல நடத்துவதாக...
teachers protest update
teachers protest update
Published on
Updated on
1 min read

சென்னை எழும்பூரில் இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. சம வேலைக்குச் சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் எழும்பூர் அம்பேத்கர் கல்லூரி முன்பாகத் திரண்டதால் அந்தப் பகுதியே பரபரப்பாகக் காணப்பட்டது. இந்தப் போராட்டத்தின் போது பெண் ஆசிரியர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். தாங்கள் குற்றவாளிகள் அல்ல, ஆசிரியர்கள் என்பதைக்கூடப் பாராமல் காவல்துறையினர் தங்களை ஒரு தீவிரவாதியைப் போல நடத்துவதாக ஆசிரியர்கள் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டினர். போராட்டத்தின் போது ஆசிரியர்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டதாகவும், இது ஒரு ஜனநாயக நாட்டில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் மரியாதையா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கை என்னவென்றால், 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்பாகச் சேர்ந்தவர்களுக்கும் இடையே உள்ள ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என்பதாகும். ஒரே பணியைச் செய்யும் ஆசிரியர்களுக்கு இடையில் சம்பள வேறுபாடு இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று ஆசிரியர்கள் கேட்கின்றனர். கலைஞர் ஐயா காலத்தில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது, ஆனால் தற்போது தங்களது அடிப்படை ஊதியமே பறிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தற்போது முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இதே ஆசிரியர்கள் போராடியபோது நேரில் வந்து ஆதரவு தெரிவித்ததை ஆசிரியர்கள் நினைவு கூர்ந்தனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த ஊதிய முரண்பாடுகள் சரி செய்யப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்த பின்னரும், இன்னும் குழு அமைக்கிறோம் என்று கூறி காலத்தைக் கடத்துவது ஏமாற்று வேலை என்று ஆசிரியர்கள் சாடுகின்றனர்.

"ஒரு கொத்தனாருக்கு ஆயிரம் ரூபாய், இன்னொரு கொத்தனாருக்கு ஐந்நூறு ரூபாய் கொடுத்தால் ஏற்றுக்கொள்வோமா?" என்று ஆசிரியர் ஒருவர் கேள்வி எழுப்பினார். கடந்த 16 ஆண்டுகளாக இந்த அநீதியைச் சுமந்து வருவதாகவும், இனியும் தங்களால் பொறுக்க முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். வரும் ஜனவரி ஆறாம் தேதிக்குள் நல்ல பதில் வரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு முன்பே தங்களை அழைத்துத் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com