
சேலம் சூரமங்கலம் அருகே நெடுஞ்சாலை நகரில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் ஆத்தூர் அருகே உள்ள தாழ்வெள்ளம் உண்டு உறைவிடப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே
கருமந்துறை மலைப்பகுதியில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் பணியாற்றியபோது அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தது.
2015 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் மாணவர் விடுதிகளில் சமையலர் பணிக்கு போலி பணி ஆணை வழங்கியதாக 56 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திலும் தலைமை ஆசிரியர் வெங்கடேசனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தொடர் புகார்களை அடுத்து அவரது வருவாய் மற்றும் சலுகைகள் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட துறை ரீதியான விசாரணையில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் நெடுஞ்சாலைநகரில் வசிக்கும் வெங்கடேசனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.