
மதுரையில் தொடர் கனமழை காரணமாக ஆயிரம் டன் அளவிற்கு நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தொடர் மழை
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டத்திலும் தொடர் மழை பெய்ததன் காரணமாக, தோப்பூர் திறந்தவெளி அரசு நெல் சேமிப்பு கிட்டங்கில் வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் சேதமடைந்துள்ளன.
திறந்தவெளியில் நெல் மூட்டைகள்
மதுரை மாவட்டம் தோப்பூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சேமிப்பு கிடங்கில் ஆண்டுக்கு 5 லட்சம் நெல் மூட்டைகள் சேமிக்கப்படுகின்றன. திறந்த வெளியில் இருப்பதால், மழையில் நனைந்த நெல் மூட்டைகளில் உள்ள நெல்மணிகள் முளைவிட்டு வளரத் தொடங்கியுள்ளன. இதனால், ஆயிரம் டன் அளவிற்கு நெல்மூட்டைகள் சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். எனவே, நெல் மூட்டைகளை இனி வரும் காலங்களில் பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்,.