
நெருங்கும் சட்டமன்ற தேர்தல் திமுக கூட்டணிக்குள் கூடுதல் இடம் கேட்டு பிரச்னை நிலவி வருகிறது.
தேர்தல் நேரத்தில் திமுகவிடம் கூடுதல் இடம் கேட்டு நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சிகள்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் திமுக தேர்தல் பணிகளை விரைந்து முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் இலக்கு வைத்து திமுக தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்பதற்காக திமுக தொடர்ந்து உழைத்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த அதிமுக பாஜக கூட்டணி தற்பொழுது மீண்டும் கூட்டணியை அமைத்து இருக்கிறது. இந்த கூட்டணியை வெற்றி பெற வைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை திமுக எடுத்து வருகிறது.
ஒருபுறம் அதிமுக பாஜக கூட்டணியை வெற்றி பெறக் கூடாது என்பதற்காக திமுக தேர்தல் வேலையை மேற்கொண்டு வருகிறது, மறுபுறம் கூட்டணி கட்சிகள் இந்த தேர்தலில் கூடுதலாக இடங்கள் பெற்று தங்கள் கட்சியின் பலத்தையும், சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் செயல்பட்டு வருகின்றன. இது திமுகவிற்கு தேர்தல் நேரத்தில் கூடுதல் நெருக்கடியை கொடுக்கக் கூடியதாக அமைந்துள்ளது.
குறிப்பாக, திமுக கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமைத்த கூட்டணி தற்போது வரை தொடர்ந்து வருகிறது. திமுக கூட்டணியில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் தான் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக உள்ளிட்ட காட்சிகள் கடந்த முறை தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விட இந்த முறை கூடுதலாக இடங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் தொடர்ந்து திமுக சார்பில் தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக கூறி வருகிறார்கள் ஒரு சில வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை என்றால் அதற்கு மத்திய அரசிடம் இருந்து போதுமான நிதி வரவில்லாதது மட்டுமே தான் காரணம் என்றும் திமுக தெரிவித்து வருகிறது.
தேர்தல் நேரத்தில் கூடுதல் இடங்கள் கேட்பது என்பது வழக்கமான ஒன்றுதான் எனவும் அவர்களின் கட்சியின் பலத்தை காட்ட வேண்டும் என்பதற்காக கூடுதல் இடங்களை கேட்கிறார்கள் ஆனால் தேர்தல் நேரத்தில் பாஜக என்ற ஒற்றை எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அமர்ந்து பேசி முடிவெடுக்கப்படும். ஒரு சில பிரச்சனைகள் வரும் ஆனால் திமுக கூட்டணியில் இருந்து யாரும் இதுவரையிலும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று விலகி சென்றது இல்லை என்று திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே எஸ் இளங்கோவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
திருமாவளவன் உறுதி!
இந்த நிலையில் தான், “திமுக -வோடு பேசி நாங்களும் கூடுதல் இடங்களை கேட்டு பெறுவோம் சொல்லியிருந்தார். ஆனால் தற்போது, “கூட்டணி நலனையும் வெற்றியையும் கருத்தில்கொண்டு திமுக -விடம் தொகுதிகள் கேட்போம், கூடுதல் தொகுதிகளை கேட்கும் கோரிக்கை நிறைவேறாவிட்டாலும் திமுக கூட்டணியில்தான் இருப்போம்” என உறுதிபட கூறியிருக்கிறார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூடுதல் இடங்களை தங்கள் வசம் வைத்து கொண்டு தங்களின் முழு பலத்தையும் காட்ட வேண்டும் என்று தொண்டர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் திமுக தலைமை தங்கள் கட்சியின் பலத்தை கட்ட முன்வருமா அல்லது கூட்டணி காட்சிகள் தக்க வைக்க கூடுதல் இடங்கள் கொடுக்க முன்வருமா என பொறுத்திருந்து பார்க்கலாம்..
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.