2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து மைனாரிட்டி அரசாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
தவெக ஆட்சி 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், சமீபத்தில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் மற்றும் ஆதரவு அளித்துள்ள இடதுசாரிக் கட்சிகள் தவெக மீது அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
அரசுக்கு ஆதரவு அளித்திருந்தாலும், பாகுபாடு இல்லாமல் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன சிபிஐ, சிபிஐ(எம்) கட்சிகள். தமிழகத்தில் ஆட்சியே அந்தரத்தில் இருக்கும்போது விஜய்யை அடுத்த பிரதமர் என்ற ரேஞ்சுக்கு அமைச்சர்கள் ஹைப் செய்வது தேவையில்லாத பின்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், இது ரீல் ஹைப்பா? ரியல் ஹைப்பா? என்ற ஆய்விலும் அரசியல் நோக்கர்கள் ஈடுபட்டுள்ளனர். அட, ஒரு தலைவரைக் குறித்து அடுத்த அமெரிக்க ஜனாதிபதியே என்று கூட தொண்டர்கள் கோஷமிடுவது அரசியலில் சகஜம்தானே என்று கடக்க முடியாமல் போக சில காரணங்கள் இருக்கின்றன. அமைச்சர்களின் இந்தப் பேச்சு திட்டமிட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து செங்கோட்டையன், ஜெகதீஸ்வரி, ஸ்ரீநாத் போன்ற அமைச்சர்கள் விஜய்தான் அடுத்த பிரதமர் என்ற ரீதியில் பேசி வருகின்றனர். சீனிவாச சேதுபதி, விஜய் 2029-ல் பிரதமர் என்ற இலக்கை நோக்கித்தான் செல்வதாக வெளிப்படையாகக் கூறினார்.
தவெகவினரின் இந்தப் பேச்சுக்குப் பதிலளித்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், "பிரதமர் வேட்பாளர் தொடர்பாக த.வெ.க.வினர் வெளியிடும் கருத்துகள் ரசிகர் மன்ற மனநிலையிலேயே உள்ளது. 'இந்தியா' கூட்டணியில் தற்போது 23 கட்சிகள் உள்ளன. த.வெ.க.வுக்கு எம்.பி.க்கள் இல்லை. எனவே, அவர்களுக்கு எம்.பி.க்கள் கிடைத்ததும் 'இந்தியா' கூட்டணியில் இணைக்கப்படுவர். த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை என்றால், மத்திய மந்திரி அமித்ஷா கதையை முடித்திருப்பார். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராகி இருப்பார்" என்று கூறியிருக்கிறார்.
இந்தக் கருத்து தவெக-காங்கிரஸ் இடையே சிறிய உரசல்கள் ஏற்பட்டிருப்பதைக் காட்டுகிறது. ஆனால், அமைச்சர்களின் பேச்சு வெறும் ரசிகர் மனப்பான்மையில் இருந்து வந்ததா அல்லது திட்டமிட்ட பிம்பக் கட்டமைப்பா என்பதை ஆராய வேண்டும்.
வட இந்திய சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோக்கள் இந்தச் சந்தேகத்தை ஆழப்படுத்துகின்றன. விஜய் ஆட்சியமைத்தது முதல், அவர் பாலியல் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய உத்தரவிட்டார், கோயில் காணிக்கைப் பணத்தைக் கல்விக்குச் செலவிட உத்தரவிட்டார், மசூதி இமாம்களுக்கு அரசு சம்பளம் வழங்க உத்தரவிட்டுள்ளார், பசுவதைத் தடைச் சட்டத்தை இயற்றுகிறார் எனப் பல பொய்களைப் பரப்பும் வீடியோக்கள் வட இந்தியாவில் இந்தி மொழியில் டிரெண்ட் ஆகி வருகின்றன.
இந்த வீடியோக்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான தொனியில் உள்ளன. தேர்தல் பிரசாரத்தின்போது விஜய்க்கு ஆதரவாகத் தமிழகத்தில் டிரெண்ட் ஆன ரீல்ஸ்களை இவை நினைவுபடுத்துகின்றன. எனவே, இது விஜய்யை இந்திய அரசியலுக்கு லான்ச் செய்வதற்கான தயாரிப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மறுபக்கம், தவெக கட்சியை தமிழகத்தைத் தாண்டி விரிவு செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. முதலில் கேரளாவில் இருந்து இந்தத் திட்டம் தொடங்கப்படுவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
மத்திய அரசியலைப் பொருத்தவரையில், பாஜக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் சிறிய தடுமாற்றத்தைச் சந்தித்திருந்தாலும், அடுத்தடுத்த சட்டமன்றத் தேர்தல்களை வென்று தன்னை மீட்டுள்ளது. 2029 தேர்தலுக்காக Gen Z-ஐ ஈர்க்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இந்தியா கூட்டணி எப்போதும் இல்லாத அளவு ஒற்றுமையுடன் இருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியபோது மாற்றுக்கருத்து தெரிவித்த அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி கூட கூட்டணியை 2029 வரை உடையாமல் கொண்டு செல்வதில் கவனமாக உள்ளனர்.
"த.வெ.க.வுக்கு எம்.பி.க்கள் இல்லை. எனவே, அவர்களுக்கு எம்.பி.க்கள் கிடைத்ததும் 'இந்தியா' கூட்டணியில் இணைக்கப்படுவர்" என்று மாணிக்கம் தாகூர் கூறினாலும், இந்தியா கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைவது குறித்து தவெக வெளிப்படையாக பேசாதது குறிப்பிடத்தக்கது.
தேசிய அரசியலில் பிரதமர் பதவிக்கான போட்டியாளராக விஜய் காலடித்தடம் பதிக்கிறார் என்றால், அது ராகுல் காந்தியைக் குறிவைத்த அடியாகவே இருக்கும். விஜய்யை, தெற்கில் இருந்து ஒருவரை, இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்கள் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள வாய்ப்பு மிகக் குறைவுதான். எனவே, தவெகவின் இந்த முயற்சிகளால் பயன்பெறப் போவது யார் என்பது அடுத்தகட்டப் பிரச்சினை.
அடிப்படையாக அகலக்கால் வைக்கிறதா தவெக என்ற கேள்வி எழுகிறது. தேர்தலுக்கு முன்பு வரை சரியான கட்டமைப்பு கூட இல்லாத கட்சியாகத்தான் தவெக பார்க்கப்பட்டது.
அரசியலில் தற்போதைய நிலையில், த.வெ.க. ஒரு குழந்தை. 2½ வயதுதான் ஆகிறது. ஆட்சிக்கு வந்து 100 நாட்களை இப்போதுதான் கடக்கிறது.
முதலில் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் த.வெ.க. கவனம் செலுத்தி, மொத்தம் உள்ள 7 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றாலும், பெரும்பான்மைக்கு 4 தொகுதிகள் குறைவாகத்தான் இருக்கும்.
எனவே, தேவையில்லாமல் இப்போது தேசிய அரசியலைப் பேசி கூட்டணிக்குள் குதர்க்கத்தை ஏற்படுத்துவது த.வெ.க.வுக்குத்தான் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்