

தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து, பிரதான திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைத் தங்களது பொது எதிரியாகக் கருதித் தாக்கத் தயாராகி வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தேர்தல் களம் என்பது "தமிழகம் வெர்சஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணி" (Tamil Nadu vs NDA) என்ற பிம்பத்தையே முன்னிறுத்தி வருகிறார். ஆனால், நடிகர் விஜய் தனது சமீபத்திய பேச்சுகளில் அதிமுகவைப் புறக்கணித்துவிட்டு, பாஜகவை மட்டும் பிரதான எதிரியாகக் கட்டமைக்க முயல்வது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் இது குறித்துக் கூறும்போது, வரும் நாட்களில் விஜய் ஒரு மிகப்பெரிய "தர்ம அடி" அரசியலைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறார். திமுகவின் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கனிமொழி முதல் அதிமுகவின் சி.வி.சண்முகம், ஜெயகுமார், செல்லூர் ராஜு என சுமார் 40-க்கும் மேற்பட்ட முன்னணி அரசியல் தலைவர்கள் விஜய்யை நோக்கித் தங்களது விமர்சனக் கணைகளைத் தொடுக்கக் காத்திருக்கின்றனர். குறிப்பாகத் துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்கள் பேசத் தொடங்கினால், விஜய்யைத் தனது நையாண்டியால் ஒரு சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் "ட்ரோல் மெட்டீரியல்" ஆக்கிவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், 72 நாட்கள் மக்கள் கண்ணில் படாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்துவிட்டு, இப்போது திடீரென வந்து அரசியல் பேசினால் அது எடுபடாது. அவருக்குத் திரையுலகில் ரசிகர்கள் இருக்கலாம், ஆனால் பூத் அளவில் வேலை செய்யத் தொண்டர்கள் இருக்கிறார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. "கேரளாவில் படம் ஓடுவதால் அங்கேயே போய் விருப்ப மனு வாங்க வேண்டியதுதானே" என்று கிண்டலாகக் குறிப்பிட்ட அவர், ஜாக்கி சானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் அனைவரும் அவருக்கு ஓட்டுப் போடுவார்களா என்று கேள்வி எழுப்பினார்.
மறுபுறம், பாஜகவின் உட்கட்சிப் பூசல் மற்றும் அண்ணாமலையின் தற்போதைய நிலைப்பாடு குறித்தும் அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அண்ணாமலை திடீரெனப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தது கட்சிக்குள் இருக்கும் கோஷ்டிப் பூசலையே காட்டுகிறது. விஜய், அண்ணாமலை மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகிய மூவருமே தங்களை இப்போதே முதலமைச்சர் வேட்பாளராக நினைத்துக் கொள்கின்றனர்.. அடிமட்டத்திலிருந்து உழைக்காமல் குறுக்கு வழியில் பதவிக்கு வர நினைப்பவர்களுக்கு இது போன்ற சறுக்கல்கள் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இறுதியாக, 2026 தேர்தல் களம் என்பது மீண்டும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களுக்கு இடையிலான போட்டியாகவே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. விஜய்யைப் போன்ற புதிய வரவுகள் இந்த இரு பெரும் சக்திகளைச் சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல. அதேசமயம், அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து விஜய்யைத் தாக்கத் தொடங்கினால் அதிலிருந்து அவர் மீண்டு வருவது கடினம் என்பதே தற்போதைய கள நிலவரமாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.