தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு பதிலளிக்கும் தீர்மானத்தில், ஆளுநர் உரை மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்தார். அனைவரும் மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் என்பதைக் குறிப்பிட்ட அவர், தனது அரசியல் பயணத்தை விமர்சிக்கும் விதமாக கூறப்படும் கருத்துகளுக்கு பதிலாக “ரீல்ஸ் அல்ல, ரியல்” எனக் கூறி விளக்கம் அளித்தார். தொடர்ந்து தனது அரசியல் பயணம் நடிகராக தொடங்கி மக்களின் ஆதரவுடன் வளர்ந்ததாகவும், விஜய் மக்கள் இயக்கம் மற்றும் சமூக நலப்பணிகள் மூலம் மக்கள் சேவையில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார். கல்வி, நலத்திட்டங்கள், போராட்டங்கள் மற்றும் சமூக நீதிக் கொள்கைகள் வழியாக தொடர்ந்து மக்கள் நலனுக்காக செயல்பட்டு வருவதாகவும், தற்போது தமிழக வெற்றி கழகம் மூலம் சமூக நீதி, பெண் உரிமை மற்றும் மதச்சார்பின்மை கொள்கைகளுடன் அரசியல் பயணத்தை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து எதிர்க்கட்சியின் பல குற்றச்சாடுகளுக்கு பதிலளித்த முதல்வர் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது என்றும் கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் தேசிய கீதம் இரண்டு முறை பாடியதாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு திமுகவும் அது போல செய்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி ஆதாரத்துடன் நிரூபித்து “எங்களுக்கு படம் எடுப்பதாக நினைத்து உங்கள் வேஷத்தை கலைக்காதீர்கள்” என எதிர்க்கட்சியினரை நோக்கி கூறினார்.
இதையடுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்த பிறகும் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் சட்டமன்ற சபாநாயகரிடம் குட்டி ஸ்டோரி சொல்வதாக அனுமதி கேட்டு தொடங்கிய அவர் “ஒரு ஊர்ல ஒரு பெரியவர் தனது தலையில் கைகளை வைத்து கொண்டு யாரையோ தேடிக்கொண்டிருந்தார்.. அப்போது அங்கு சென்ற சிறுவன் யாரைத் தேடுகிறீர்கள் என கேட்கவே அதற்கு பெரியவர்.. உங்க அப்பா இங்கதான் இருப்பாருனு சொன்னாங்க அதன் தேடிகிட்டு இருக்கேன்.. எங்க உங்க அப்பாவையே காணோம்” என கதை சொல்லி எங்களுக்கும் நக்கலாக நையாண்டியாக பேச தெரியும் என்று கூறினார். இந்த குட்டி ஸ்டோரியில் முன்னாள்முதலமைச்சர் ஸ்டாலின் அவரது சொந்த தொகுதியிலேயே தோல்வியடைந்து சட்டசபைக்கு கூட வரவில்லை என்பதை விஜய் விமர்சித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்