

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு முதல்முறையாக கரூருக்கு இன்று வந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு பணி நியமன ஆணைகள் வழங்கும் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அதில் செந்தில் பாலாஜி குறித்து பேசிய விஜய், திமுகவினர் ஓடி போய் ஒளிந்துகொண்டதாகவும், ஓடு ஓடு ஓடு என்று பாட்டு பாடி விமர்சித்து இருந்தார். மேலும் கரூர் பிரச்சனையை பற்றி திமுகவிற்கு பேச திராணி இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுக MLA செந்தில் பாலாஜி தனது X தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?”
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர் சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும். அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
“திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்” என்றும் குறிப்பிட்டார். இறுதியாக “ஓடு. ஓடு.. ஓடு..” விஜய் பாணியிலேயே பதில் கொடுத்துள்ளார்.
மேலும் திமுகவினர் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்