35,000 டாலர் மதிப்புள்ள வைர மோதிரம்! பேருந்தில் கண்டெடுத்த டிரைவர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

நேர்மை மற்றும் தொழில்முறை கடமை உணர்வைப் பாராட்டி, எஸ்.பி.எஸ் டிரான்சிட் நிறுவனம் அவருக்கு உரிய அங்கீகாரம்...
35,000 டாலர் மதிப்புள்ள வைர மோதிரம்! பேருந்தில் கண்டெடுத்த டிரைவர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!
Published on
Updated on
2 min read

சிங்கப்பூரில் 54 வயதான பேருந்து ஓட்டுநர் ஒருவர், பேருந்தில் தவறவிடப்பட்ட சுமார் 35,000 டாலர் மதிப்புள்ள வைர மோதிரத்தை மீட்டெடுத்து, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மே 11-ஆம் தேதி இரவு, கிளாரிசா டான் என்ற பெண் தனது நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டு, சிக்லாப்பில் இருந்து ஈஸ்ட் கோஸ்ட் ரோடு நோக்கிச் செல்லும் எஸ்.பி.எஸ் (SBS) பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது தவறுதலாக அவர் அணிந்திருந்த விலையுயர்ந்த வைர மோதிரத்தைத் தவறவிட்டுள்ளார். அடுத்த நாள் காலை, அவர் இது குறித்து எஸ்.பி.எஸ் டிரான்சிட் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு கேட்டுள்ளார். அப்போதுதான், அந்தப் பேருந்தின் ஓட்டுநரான தியோ லாய் ஹுவாட், மோதிரத்தைக் கண்டெடுத்து உரிய இடத்தில் ஒப்படைத்த விஷயம் அவருக்குத் தெரியவந்தது.

பேருந்து சேவை முடிந்ததும், தியோ வழக்கமான தனது சோதனையை மேற்கொண்டபோது, பேருந்தின் பின்பக்கக் கதவு அருகில் அந்த வைர மோதிரம் கிடப்பதைக் கண்டார். அந்த மோதிரத்தின் மதிப்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட அவர், உடனடியாக அதை தனது மேற்பார்வையாளரிடம் ஒப்படைத்தார். ஒருவேளை உரிமையாளர் மோதிரத்தைத் தேடி வரலாம் என்பதால், அவர் மிகவும் பொறுப்புடன் செயல்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. தியோவின் இந்த நேர்மை மற்றும் தொழில்முறை கடமை உணர்வைப் பாராட்டி, எஸ்.பி.எஸ் டிரான்சிட் நிறுவனம் அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து எஸ்.பி.எஸ் டிரான்சிட் நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டது. சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் அந்தப் பதிவை லைக் செய்து, ஓட்டுநர் தியோவின் நேர்மையைப் புகழ்ந்து தள்ளினர். "இவரைப் போன்ற மனிதர்களைப் பார்க்கும்போதுதான், மனிதாபிமானத்தின் மீதான நம்பிக்கை மீண்டும் பிறக்கிறது" என்று பலரும் கமெண்ட் செய்தனர். 30 ஆண்டுகளாகப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றும் தியோ, இதுவரை பல பொருட்களைக் கண்டெடுத்திருந்தாலும், இவ்வளவு விலையுயர்ந்த மோதிரம் ஒன்றைத் தான் மீட்டதில்லை என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். உரிமையாளர் எவ்வளவு கவலைப்பட்டிருப்பார் என்பதை உணர்ந்தே தான் அதைச் செய்ததாக அவர் கூறினார்.

தன்னை மீண்டும் தேடி வந்த அந்த வைர மோதிரத்தைக் கண்டதும், கிளாரிசா டான் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார். "அந்த மோதிரம் எனக்கு வெறும் பண மதிப்பு மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமான மதிப்பும் கொண்டது. தியோவின் செயல், எனக்கு இழந்த நம்பிக்கையை மீண்டும் தந்தது. நம்மிடையே இன்னும் இது போன்ற நல்ல மனிதர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது," என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார். ஒரு சின்ன நேர்மையான செயல் எப்படி ஒருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு, இந்த பேருந்து ஓட்டுநரின் செயல் ஒரு சிறந்த உதாரணமாக மாறியிருக்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com