ஐக்கிய நாடுகளின் வானிலை ஆய்வு நிறுவனமான உலக வானிலை அமைப்பு (WMO), வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ, 2026 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் வேகமாக வலுப்பெறும் என்று வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
வலுவான 'எல் நினோ' விளைவு காரணமாக, கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரி அளவை விட 2°C வரை உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது. 'எல் நினோ' அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டது என விஞ்ஞானிகளும் நிபுணர்களும் எச்சரித்துள்ள நிலையில், அதன் விளைவுகள் வரும் மாதங்களில் பல கண்டங்களிலும் உணரப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
எல் நினோ என்பது, உலகெங்கிலும் உள்ள வானிலை முறைகளைப் பாதிக்கக்கூடிய ஒரு முக்கிய காலநிலைச் சுழற்சியான எல் நினோ ஒரு வெப்பமான கட்டமாகும். மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதன் இயல்பான அளவை விட உயரும்போது இது உருவாகிறது எனக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு பொதுவாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றி, ஒன்பது முதல் பன்னிரண்டு மாதங்கள் வரை நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது.
எல் நினோ பசிபிக் பெருங்கடலில் தொடங்கினாலும், அது வளிமண்டல சுழற்சியை மாற்றுவதன் மூலம் அப்பகுதிக்கு அப்பாலும் வெகு தொலைவில் மழைப்பொழிவு, வெப்பநிலை மற்றும் புயல் வடிவங்களைச் சீர்குலைக்கக்கூடும். இதன் தாக்கம் சீரானது அல்ல, அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். மேலும், எல் நினோ ஆண்டில் வெவ்வேறு நாடுகள் பெரும்பாலும் வெவ்வேறு விளைவுகளை எதிர்கொள்கின்றன. எல் நினோ பற்றி ஏன் இவ்வளவு கவலையளிக்கிறது?
உலக வானிலை அமைப்பின் (WMO) முன்னறிவிப்புகளின்படி, பசிபிக் பெருங்கடலுக்கு அப்பால் உள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் வெப்பமண்டல அட்லாண்டிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பில் வெப்பநிலை சராசரிக்கும் அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெப்பமான நீர், மழைப்பொழிவு முறைகள், வெப்பமண்டல சூறாவளிச் செயல்பாடு மற்றும் பரந்த பிராந்திய காலநிலை நிலைகளை பாதிக்கக்கூடும். இந்த எல் நினோ, உணவு உற்பத்தி, நீர் வளங்கள், எரிசக்தித் தேவை மற்றும் பேரிடர் அபாயங்களைப் பாதிக்கக்கூடும் என்பதால், முன்கூட்டிய எச்சரிக்கையும் ஆயத்தப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், 2026 தொடங்கியதில் இருந்து உலகின் பல பகுதிகளில் வெப்பநிலை மிகவும் உயர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த வெப்பநிலை உச்சத்தை எட்டியுள்ளது. தார்கள் உருகும் அளவிற்கு வெப்பநிலை இருக்கிறது. இந்தியாவிலும் வெப்பநிலை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. குறிப்புக இந்த முறை பருவமழை தப்பலாம் அல்லது வழக்கத்தை விட குறைவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இதனால் பஞ்சம் போன்றவை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், எல் நினோ வானிலை பொதுவாக இந்தியாவில் மழைப்பொழிவைக் குறைக்கிறது. ஜூன் மாதத்தில், நாடு முழுவதும் சுமார் 40 சதவிகித மழைப் பற்றாக்குறை ஏற்பட்டதற்கும், இதில் மத்திய இந்தியா 50.4 சதவிகிதப் பற்றாக்குறையுடன் மிக மோசமாகப் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி மத்திய அமெரிக்கா, கரீபியன் மற்றும் வடமேற்கு தென் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் சராசரிக்கும் குறைவான மழை எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தென்மேற்குப் பகுதிகளின் சில இடங்களில் சராசரிக்கும் அதிகமான ஈரமான வானிலை நிலவ அதிக வாய்ப்புள்ளது.
கடைசி எல் நினோ நிகழ்வானது, 2023-ஆம் ஆண்டை வரலாற்றிலேயே இரண்டாவது வெப்பமான ஆண்டாக கூறப்படுகிறது. எல் நினோ பொதுவாக நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் உச்சத்தை அடைந்தாலும், அதன் விளைவாக ஏற்படும் வெப்பநிலை உயர்வு வழக்கமாகப் பிற்பகுதியில்தான் நிகழும். இந்தியாவில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாலும், ஜூலை மாதத்தில் இயல்பை விட குறைவான பருவமழை பெய்யும் என கணிப்புகள் சுட்டிக்காட்டுவதாலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உருவாகி வரும் சூழ்நிலையை ஆய்வு செய்தார்.
மேலும், நாட்டின் சில பகுதிகளில் ஏற்படக்கூடிய வறட்சி நிலைகள் குறித்து உயர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமைச்சகங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மழைப்பொழிவு பற்றாக்குறையாக உள்ள பகுதிகளுக்கு ஏற்ற பயிர்கள் குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குவதற்காக, வேளாண்மை அமைச்சகத்தையும் மற்ற தொடர்புடைய அமைச்சகங்களையும் விழிப்புடன் இருக்குமாறும், மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுமாறும் உள்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.நீடித்த மழைப்பொழிவு பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சமாளிப்பதற்கான நாட்டின் தயார்நிலையை ஆய்வு செய்த அதேவேளையில், தடையற்ற மற்றும் போதுமான மின்சார விநியோகத்தை உறுதி செய்யுமாறு மின்சார அமைச்சகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் மேலும் உத்தரவிட்டுள்ளார்.
உலகின் பலநாடுகள் இந்த எல் நினோ-வால் பாதிக்கப்பட்டு வரும் வேளையில் அவர்கள் இனிவரும் தீவிர எல் நினோ-விற்காக தயார் படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் இந்தியாவும் மக்களை காக்க தயார்படுத்தி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.