1,200 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எரிந்து வந்ததாக நம்பப்படும் புனிதமான “அணையாத சுடரின்” இருப்பிடமான, ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க ரெய்காடோ மண்டபத்தை அழித்த தீ விபத்து.
ஹிரோஷிமா மாகாணத்தின் மியாஜிமா தீவில் உள்ள தைஷோ-இன் கோயில் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், மரத்தாலான ரெய்காடோ மண்டபம் சாம்பலானதுடன், அருகிலுள்ள மரங்களுக்கும் பரவியதாகவும், ஆனால் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், ஜப்பானின் மிகவும் பிரபலமான ஆன்மீகச் சின்னங்களில் ஒன்றான இந்த கோவிலின் அழிவு நாடு தழுவிய கவனத்தை பெற்றுள்ளது. ரெய்காடோ மண்டபத்தில், "அணையாத சுடர்" அல்லது "நித்திய சுடர்" என்று அழைக்கப்படும் அணையாத நெருப்பு வைக்கப்பட்டிருந்தது. கோயில் மரபின்படி, இந்தச் சுடர் முதன்முதலில் 806-ஆம் ஆண்டில், கோபோ தைஷி என்று அறியப்பட்ட பௌத்த துறவியான குகாயால், மிசென் மலையில் தவப் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சுடர் நீண்ட காலமாக ஆன்மீகத் தொடர்ச்சி மற்றும் அமைதியின் சின்னமாக அந்நாட்டு மக்களால் கருதப்பட்டு வருகிறது. மேலும், இதன் ஒரு பகுதி முன்னர் ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் உள்ள "அமைதிச் சுடரை" ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. கட்டமைப்பிலிருந்து தனியாகப் பாதுகாக்கப்பட்டதால் புனிதச் சுடர் தப்பியதாகக் கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், அந்த மண்டபத்தின் அழிவு, ஜப்பானின் பாரம்பரிய மரக் கட்டிடக்கலை எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்த கேள்விகளை மக்களிடையே மீண்டும் எழுப்பியுள்ளது. நவீன பேரிடர் மேலாண்மை அமைப்புகள் இருந்தபோதிலும், அதன் பெரும்பகுதி தீ விபத்துகளுக்கு உள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் ஆயிரக்கணக்கான மரக் கோயில்களும் வழிபாட்டுத் தலங்களும் உள்ளன என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவற்றில் பல கோவில்கள் பல நூற்றாண்டுகள் பழமையானவை. இந்தக் கட்டமைப்புகள் நாட்டின் கலாச்சார அடையாளம் மற்றும் சுற்றுலாப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் அதே வேளையில், அவை நிலநடுக்கங்கள், புயல்கள் மற்றும் தீ போன்றவற்றால் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, ரெய்காடோ மண்டபம் 2005-ல் தீயில் எரிந்து, 2006-ல் மீண்டும் கட்டப்பட்டது. இது, வரலாற்றுச் சிறப்புமிக்க மதக் கட்டமைப்புகளுக்கு மீண்டும் மீண்டும் ஏற்படும் ஆபத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. சமீபத்திய தீ விபத்திற்கு புனிதச் சுடரோ அல்லது அது தொடர்பான உபகரணங்களோ காரணமாக இருந்தனவா? என்பதை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. பாரம்பரியத் தளங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் அதே வேளையில், அவற்றின் தனித்தன்மையை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த விவாதத்தையும் இந்தச் சம்பவம் மீண்டும் தூண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல ஜப்பானியக் கோயில்கள் தொடர்ந்து பாரம்பரிய மர அடிப்படையிலான கட்டுமான முறைகளையே பெருமளவில் சார்ந்து இருப்பதால், அவற்றின் வரலாற்று தன்மையை காப்பது குறித்த கலந்தாய்வு நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. அதன் மத முக்கியத்துவத்தைத் தாண்டி, அந்த “அணையாத சுடர்” ஹிரோஷிமாவின் போருக்குப் பிந்தைய அமைதி அடையாளத்துடன் இணைந்த ஆழமான தேசிய குறியீட்டைக் கொண்டிருந்தது என்றும் கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.