ஹாங்காங்கில் ஒரே இரவில் நடந்த பயங்கரம்! 44 பேர் பலி, 279 நபர்கள் மிஸ்ஸிங்!

இதனை அதிகாரிகள் வழக்கத்திற்கு மாறான தீ விபத்து எனக் குறிப்பிட்டுள்ளனர்...
ஹாங்காங்கில் ஒரே இரவில் நடந்த பயங்கரம்! 44 பேர் பலி, 279 நபர்கள் மிஸ்ஸிங்!
Published on
Updated on
1 min read

சீனாவின் நிதி மையமான ஹாங்காங்கில் உள்ள தை போ மாவட்டத்தில் அமைந்திருக்கும் வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்புக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44-ஆக அதிகரித்திருக்கிறது. இதில், ஒரு தீயணைப்பு வீரரும் அடங்குவார். மேலும், கிட்டத்தட்ட 279 குடியிருப்பாளர்களைக் காணவில்லை எனவும், அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர். இந்த கோரமான விபத்தில் அறுபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் நாற்பத்தைந்து பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஹாங்காங் சரித்திரத்தில் அண்மைக் காலங்களில் நடந்த மிக மோசமான தீ விபத்தாகும்.

கடந்த புதன்கிழமை பிற்பகலில் தொடங்கிய இந்தத் தீ விபத்தானது, அடுக்குமாடிக் குடியிருப்பின் வெளிப்புறச் சுவற்றில் அமைக்கப்பட்டிருந்த மூங்கில் சாரங்கள் மற்றும் கட்டுமான வலைகளில் பற்றி, மின்னல் வேகத்தில் அருகருகே இருந்த ஏழு கட்டடங்களுக்குள் பரவியது. கட்டடத்தைச் சுற்றியிருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய இந்தக் கட்டுமானப் பொருட்களும், அதன் தாழ்வாரங்களில் கண்டறியப்பட்ட தீவிரமாகத் தீப்பற்றக்கூடிய நுரைப்பொருள் போன்ற பொருட்களும்தான் தீ இவ்வளவு விரைவாகப் பரவ முக்கியக் காரணம் என காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை விசாரணைகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதனை அதிகாரிகள் வழக்கத்திற்கு மாறான தீ விபத்து எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தீவிபத்து தொடர்பாக, கட்டுமான நிறுவனத்தின் இரு இயக்குநர்கள் மற்றும் ஒரு ஆலோசகர் உட்பட மூன்று நபர்களை ஆட்கொலைக் குற்றத்தின் பேரில் காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் ஐம்பத்து இரண்டு முதல் அறுபத்து எட்டு வயதுக்குட்பட்டவர்கள். விபத்திற்குக் காரணமாக இருந்த கவனக்குறைவு மற்றும் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தியதன் தொடர்பில் இவர்கள் மீது குற்றவியல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீயைக் கட்டுக்குள் கொண்டு வர நூற்றுக்கணக்கான தீயணைப்பு வண்டிகள் மற்றும் சுமார் எண்ணூறு தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். நிலைமை அபாயத்தின் உச்சகட்டமான ஐந்தாம் அலாரமாக அறிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து சீன அதிபர் ஸி ஜின்பிங் அவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், உயிரிழப்புகளைக் குறைக்கவும் அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு ஹாங்காங் அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இந்த விபத்து ஒரு பெரிய பேரழிவு என்று குறிப்பிட்ட ஹாங்காங் நிர்வாகத் தலைவர் ஜான் லீ அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு, அங்கு சுமார் தொள்ளாயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். கட்டடப் பாதுகாப்பு விதிமுறைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அரசு உறுதியளித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com