கல்லறையைத் திறந்தவரை கொன்ற ஆயிரம் வருட சாபம்: எகிப்தின் இளம் மன்னன் ரகசியம்!

துட்டன்காமூன் கல்லறையின் மீது படிந்திருக்கும் அந்தச் சாபம் தான் நிகழ்த்தியதாக மக்கள் நம்ப ஆரம்பித்தனர்
young king of Egypt
young king of Egypt
Published on
Updated on
2 min read

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1922ஆம் ஆண்டு, எகிப்திய ஆய்வாளர் ஹாவர்ட் கார்ட்டர் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினர் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பைச் செய்தனர். கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருந்த இளம் எகிப்து மன்னர் துட்டன்காமூன் கல்லறையைக் கண்டுபிடித்து, அதன் சீலை உடைத்து உள்ளே நுழைந்தனர். இந்தக் கண்டுபிடிப்பு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போதிலும், அதனுடன் ஒரு மர்மமான சாபக்கதையும் பின்னிப் பிணைந்தது. மன்னரின் கல்லறையைத் தொந்தரவு செய்பவர்களுக்கு நோய், துரதிர்ஷ்டம், ஏன் மரணம் கூட நேரிடும் என்று ஒரு புராதன சாபம் இருந்ததாக எகிப்தியர்கள் நம்பினர். இந்தச் சாபம் உண்மையிலேயே இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்கு, அந்த ஆய்வில் சம்பந்தப்பட்டவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்த நிகழ்வுகள் எண்ணெய் ஊற்றின.

இந்தத் தொல்லியல் ஆய்வுக்கு நிதி உதவி அளித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட், அதாவது கார்னார்வன் பிரபு. கல்லறையைத் திறந்த சில மாதங்களிலேயே, இவர்தான் அந்தச் சாபத்தின் முதல் பலியானார். அவருக்கு ஒரு கொசு கடித்த இடத்தில் தொற்று ஏற்பட்டு, விஷமாகி, இறுதியில் இரத்த நச்சுக் காய்ச்சலால் அவர் கெய்ரோவில் உயிரிழந்தார். கார்னார்வன் பிரபு இறந்த அதே நேரத்தில், கெய்ரோ நகரில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் மர்மமான முறையில் அணைந்தன என்றும், அவரது வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட நாயும் திடீரென இறந்து போனது என்றும் செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இந்தக் காட்சியை, துட்டன்காமூன் கல்லறையின் மீது படிந்திருக்கும் அந்தச் சாபம் தான் நிகழ்த்தியதாக மக்கள் நம்ப ஆரம்பித்தனர்.

கார்னார்வன் பிரபுவின் மரணத்துடன் இந்த மர்மங்கள் முடிவடையவில்லை. இவருடைய சகோதரர் ஆப்ரே ஹெர்பர்ட் என்பவர் இரத்த நச்சுத்தன்மையால் உயிரிழந்தார். கல்லறையை எக்ஸ்-கதிர் ஆய்வு செய்த சர் ஆர்ச்சிபால்ட் டக்ளஸ்-ரீட் என்பவரும் ஒரு மர்மமான நோயால் இறந்தார். அதேபோல, அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் பணக்காரரும், நிதியாளருமான ஜார்ஜ் ஜே. கூல்ட் கல்லறையைப் பார்வையிட்ட சில நாட்களில் காய்ச்சலால் நோய்வாய்ப்பட்டு சில மாதங்களில் உயிர் துறந்தார். துட்டன்காமூன் கல்லறையுடன் தொடர்புடைய மேலும் இருபதுக்கும் அதிகமான நபர்கள் அடுத்தடுத்து நோய், விபத்து அல்லது எதிர்பாராத மரணங்களைச் சந்தித்ததாகக் கூறப்பட்டது. இதனால், அந்தச் சாபத்தின் மீதான பொதுமக்களின் பயம் மேலும் அதிகரித்தது.

ஆனால், இந்தச் சாபக் கதையை அறிவியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அடியோடு மறுக்கின்றனர். கல்லறையில் நிகழ்ந்த மரணங்கள் இயற்கையான காரணங்களால் அல்லது வேறு அறிவியல் ரீதியான காரணங்களால் நிகழ்ந்திருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, சமீபத்திய ஆய்வுகள் துட்டன்காமூனின் கல்லறையில் கதிர்வீச்சு அளவு (ரேடியேஷன்) அதிகமாக இருந்திருக்கலாம் என்றும், இந்த அதிகப்படியான கதிர்வீச்சு வெளிப்பாட்டின் காரணமாகத்தான் பலருக்கு நோய் ஏற்பட்டு மரணமடைந்திருக்கலாம் என்றும் ஒரு புதிய விளக்கத்தை அளித்துள்ளன. கல்லறைகளில் எழுதப்பட்டிருந்த மர்மமான சாப எச்சரிக்கைகள், உண்மையில் இந்த கதிர்வீச்சு அபாயத்தைக் குறிப்பதாகக்கூட இருந்திருக்கலாம் என்றும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்தச் சாபக் கதைகள் மற்றும் மரணங்களைப் பற்றி அதிகமாகப் பேசப்பட்டாலும், உண்மையில் கல்லறையைக் கண்டுபிடித்த முக்கிய ஆய்வாளரான ஹாவர்ட் கார்ட்டர், இந்த மர்மங்களைப் பற்றி அலட்சியம் காட்டியதோடு, எந்தவிதமான எதிர்பாராத மரணமும் இல்லாமல் பதினேழு ஆண்டுகள் கழித்து, தனது அறுபத்து நான்கு வயதில், இயற்கையாகத்தான் உயிர் நீத்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com