வியாழக்கிழமை அன்று மெக்சிகோ நகரில் 2026 FIFA உலகக் கோப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. ஆனால், இதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே, தேசிய கல்விப் பணியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அதிபர் கலூடியா ஷெயின்பாமின் சிக்கன நடவடிக்கைகளுக்கும், போட்டிக்காக அவரது அரசாங்கம் செலவிடும் பில்லியன் கணக்கான டாலர்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து, சியுடாட் டி மெக்சிகோ மைதானத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.
ஒருபுறம் உலக கால்பந்து ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் FIFA நடந்து கொண்டிருக்க மற்றொரு புறம் இந்த மிகப்பெரிய பேரணியாக போராட்டம் நடைபெறுகிறது. தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை கணிசமாகக் குறைத்த 2007 ஆம் ஆண்டு பொது ஊழியர் சட்டத்தை ரத்து செய்ய தற்போதைய நிர்வாகம் மறுப்பதையும், அத்துடன் சமூகப் போராட்டங்கள் மீதான அடக்குமுறை அதிகரித்து குற்றமாக்கப்படுவதையும் அவர்களின் முழக்கங்கள் முன்வைத்துள்ளனர்.
உலகக் கோப்பைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, CNTE மற்றும் பல்வேறு மாணவர், அரசியல் அமைப்புகளால் அழைக்கப்பட்ட இந்த பேரணியில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். மேலும், FIFA தொடக்க நிகழ்வைப் பாதுகாப்பதற்காக, அன்றைய தினம் அப்பகுதியில் அதீத பாதுகாப்பு நடவடிக்கைகள், சாலை மூடல்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வழித்தடங்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. கண்ணியமான ஓய்வூதியம் மற்றும் சிறந்த வாழ்க்கை நிலைமைகளுக்காக ஆயிரக்கணக்கானோர் பேரணியை நடத்தினர்.
மேலும், அங்கு நிலவிவரும் நிலையற்ற பணிச்சூழல்கள் மற்றும் புறக்கணிப்பு ஆகியவை தொடரும் வேளையில், 2026 உலகக் கோப்பை பொது நிதியிலிருந்து நிதியளிக்கப்பட்டது என்பதே இந்த போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டுகளில் முக்கியமான ஒன்றாகும். "ஆசிரியர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் கண்ணியம், அவர்களின் உலகக் கோப்பை மற்றும் இலாபங்களை விட மேலானது" என்பது பேரணி முழுவதும் எதிரொலித்த முழக்கங்களில் ஒன்றாகும்.
நிதி ஒதுக்கீட்டில் FIFA போட்டிக்காக பெரும் பகுதி பணம் செலவிடப்பட்ட போதிலும், சுகாதாரம், கல்வி, கலாச்சாரம் அல்லது ஓய்வூதியங்களுக்கு ஒரு பைசா கூட ஒதுக்கப்படவில்லை என்று மக்கள் தங்கள் குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளனர். உலக மேட்டுக்குடி மற்றும் பணக்கார மக்களின் கொண்டாட்டத்தைப் பாதுகாக்கவும் FIFA மற்றும் பெருநிறுவனங்களின் இலாபங்களை உறுதி செய்வதற்காக மாபெரும் திட்டங்கள், சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்புக்கு மில்லியன் கணக்கில் நிதி ஒதுக்கப்படும் வேளையில், மக்களின் மிக அவசரத் தேவைகளான சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, கலாச்சாரம் மற்றும் கண்ணியமான ஓய்வூதியம் ஆகியவை தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன என்று மக்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.