அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் 6 மாதங்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தபோதிலும், போரை நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்தச் சூழலில், ஈரானுக்கு எதிரான அடுத்த அடி பொருளாதார ரீதியாக அந்த நாட்டை நெரிக்கும் வகையில் இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டொனால்டு ட்ரம்ப் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளமான 'ட்ரூத் சோஷியலில்' (Truth Social), “ஈரான் மீது இதுவரை இல்லாத மிகப்பெரிய பொருளாதாரப் போரைத் தொடங்குகிறோம். இது ஒரு ‘எகனாமிக் D-Day’ (Economic D-Day)” என அறிவித்திருக்கிறார்.
ராணுவ ரீதியாக ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்தப்போகும் நாளை D எனக் குறிப்பிடுவர்.
ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பின்படி, ஈரானுக்கு நிதியுதவியோ, வியாபாரத் தொடர்புகளோ அல்லது வேறு வகையான ஆதரவோ அளிக்கும் நாடுகள் மீது அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மேலும், அதில், “சட்டவிரோத எண்ணெய் கடத்தல், பணப் பரிமாற்றங்கள், கள்ளச் சந்தைகள், போலி நிறுவனங்கள் என ஈரானுக்கு ஆதரவாகச் செயல்படும் அனைத்து வழிகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராணுவத்தின் Operation Epic Fury உடன் இணைந்து செயல்படும் வகையில், அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெஸன்ட் தலைமையில் Operation Economic Fury என்ற இந்தத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு சீனாவுக்கான மறைமுக மிரட்டலாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ஈரானிடம் இருந்து பெருமளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக சீனா உள்ளது. இதனால், ஏற்கெனவே அமெரிக்கா சீனாவின் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் பேச்சின் உடனடி பலனாக அமெரிக்காவின் நெருங்கிய தோழமை நாடான ஐக்கிய அரபு அமீரகம் (UAE), ஈரானுடன் இருந்த அனைத்து பொருளாதார மற்றும் நிதித் தொடர்புகளையும் உடனடியாகத் துண்டிப்பதாக அறிவித்துள்ளது.
ஈரானின் பதிலடி!
டிரம்பின் இந்த மிரட்டலுக்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi), “அமெரிக்கா தனது சொந்த நாட்டின் பொருளாதாரச் சீரழிவிலிருந்தும் கடன்களிலிருந்தும் மக்களின் கவனத்தைத் திருப்பவே இப்படி நாடகமாடுகிறது. இதுபோன்ற தோல்வியடைந்த கொள்கைகள் அமெரிக்காவுக்குப் புதிய எதிரிகளையும் தோல்வியையுமே பெற்றுத் தரும்” என எக்ஸ் (X) தளத்தில் காரசாரமாகப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் விரைவில் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வரவிருக்கும் நிலையில், போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கவும், ஈரானைப் பேச்சுவார்த்தைக்குப் பணிய வைக்கவும் டிரம்ப் இந்த 'பொருளாதாரப் போரை' கையில் எடுத்துள்ளார்!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்