

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பின்னால் ஓடின. ஏஐ மூலம் செலவுகளைக் குறைக்கலாம், வேலையை வேகப்படுத்தலாம் என்று அலாவுதீன் அற்புத விளக்கு போல இதைப் பயன்படுத்தத் தொடங்கின. ஆனால், இப்போது இந்த ஏஐ மோகத்தின் மாயை விலகத் தொடங்கியுள்ளது. மைக்ரோசாப்ட், அமேசான், கூகுளின் ஆல்பாபெட் மற்றும் மெட்டா ஆகிய நிறுவனங்கள் மட்டும் 2025-ஆம் ஆண்டில் ஏஐ உள்கட்டமைப்புக்காக சுமார் 320 பில்லியன் டாலர் வரை செலவு செய்துள்ளன. ஆனால், இவ்வளவு பெரிய முதலீட்டிற்கு ஏற்ற பலன் கிடைக்கிறதா என்ற கேள்வி இப்போது அந்த நிறுவனங்களுக்குள்ளேயே எழத் தொடங்கியுள்ளது.
இதற்கு உதாரணமாக ஊபர் (Uber) நிறுவனத்தை எடுத்துக்கொள்ளலாம். அந்த நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஆண்ட்ரூ மேக்டொனால்டு, தாங்கள் ஏஐ-க்காகச் செய்யும் செலவுகளை நியாயப்படுத்துவதில் பெரும் சிக்கல் இருப்பதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். நிறுவனத்திற்குள் டெவலப்பர்கள் ஏஐ டோக்கன்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதையும், அதனால் வேலையில் பெரிய முன்னேற்றம் இருக்கிறதா என்று தெரியாமலும் இருப்பதை, "டோக்கன் மேக்ஸிங்" (tokenmaxxing) என்று அங்குள்ள அதிகாரிகள் அழைக்கிறார்கள். ஊபர் நிறுவனத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட், வெறும் நான்கு மாதங்களிலேயே தீர்ந்துவிட்டது என்பதுதான் அந்நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்பத்தை ஊழியர்கள் பயன்படுத்தவில்லை என்பது பிரச்சனையல்ல. ஊபரில் 92 சதவீதத்திற்கும் அதிகமான டெவலப்பர்கள் ஏஐ உதவியாளர்களைத் தினமும் பயன்படுத்துகிறார்கள். ஊபரின் மொத்த கோட்-களில் (code) 10 சதவீதம் இப்போது ஏஐ-யால் தான் எழுதப்படுகிறது. ஆனால், ஏஐ-யால் எழுதப்படும் இந்த கோட், வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தைத் தருகிறதா? அல்லது இதனால் திட்டங்கள் வேகமாக முடிந்து புதிய வசதிகள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கின்றனவா? என்று பார்த்தால், அந்தத் தொடர்பு இன்னும் உறுதியாகவில்லை என்பதே உண்மை. இதனால் செலவு செய்யும் பணத்திற்கு ஏற்ப பலன் கிடைக்கவில்லை என்று நிறுவனங்கள் கவலைப்படுகின்றன.
இதேபோல் மற்ற நிறுவனங்களும் ஏஐ செலவுகளைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனம் சில வெளிப்புற ஏஐ கோடிங் சந்தாக்களையும் குறைத்து வருகிறது. டுயோலிங்கோ (Duolingo) போன்ற நிறுவனங்கள், ஊழியர்கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்கிறார்களா என்று ஏஐ பயன்பாட்டை வைத்து மதிப்பீடு செய்யும் முறையைக் கைவிட்டுள்ளன. ஊழியர்கள் வேலையில் எந்த முன்னேற்றமும் தராத ஏஐ கருவிகளைப் பயன்படுத்தக் கட்டாயப்படுத்தப்படுவதாகப் புகார் கூறியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏஐ-யைப் பயன்படுத்துவதற்கு முன்பு, ஊழியர்கள் சொந்தமாகச் சிந்திக்கப் பழக வேண்டும், ஏஐ-யை அப்படியே நம்புவது பெரிய தவறாகும் என்று தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஏஐ-யை எல்லாத் துறைகளிலும் திணிப்பதற்குப் பதிலாக, எந்தெந்த வேலைகளில் இது உண்மையாகவே பலன் தருகிறது என்று ஆய்வு செய்து, பிறகு அதை அமல்படுத்த வேண்டும் என்பதே பல நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அனுபவம் வாய்ந்த நபர்கள் ஏஐ-யைச் சோதித்துப் பார்த்து, அது எங்கே வேலை செய்கிறது, எங்கே தோல்வி அடைகிறது என்று ஆவணப்படுத்த வேண்டும். அதைச் செய்யாமல் எல்லா ஊழியர்களுக்கும் ஏஐ உரிமங்களைக் கொடுத்துவிட்டு, பிறகு செலவு குறையவில்லை என்று வருந்துவதில் அர்த்தமில்லை. தொழில்நுட்பம் என்பது பணத்தை அள்ளி இறைக்கும் கருவியாக மட்டும் இருக்கக் கூடாது, அது வேலையின் தரத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டும். ஊபர், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இப்போது இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.