அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: தடை விதிக்க கோரிய வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: தடை விதிக்க கோரிய வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கு நீதிபதி குமரேஷ்பாபு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி. டி பிரபாகர் ஆகியோர் அடுத்தடுத்து வாதங்களை முன்வைத்தனர். பொதுச்செயலாளர் பதவிக்காக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கட்சியின் விதிகள் திருத்தப்பட்டுள்ளதாக ஓபி.எஸ் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த விதிகளை திருத்தி நிபந்தனைகளை நீக்கி பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட அனுமதித்தால் போட்டியிடுவார் என்றும், ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், நிபந்தனைகளை நீக்கினால் வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாக அவர் உறுதி அளித்தார். 

இதையும் படிக்க : சட்டப்பேரவையில் நாளை மீண்டும் ஆன்லைன் தடை சட்ட மசோதா தாக்கல்...!

இதனைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தாங்கள்தான் உண்மையான கட்சி என்றால் தேர்தல் ஆணையம் மற்றும் மக்கள் மன்றத்தில் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் கூறினார். திமுகவை எதிர்கொள்ள தெளிவான, வலுவான ஒற்றை தலைமை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், வலுவான எதிர்க் கட்சியாக அதிமுக செயல்படுவதை வீழ்த்தும் நோக்கில் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், ஆகவே, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கூடாது என்றும் ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். 

இதனையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், ஓபிஎஸ் தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வரும் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை வரை அவகாசம் வழங்கியும் நீதிபதி குமரேஷ்பாபு உத்தரவிட்டார்.