" நீங்கள் விரும்பியதை நான் கொடுப்பேன்” மோசடி மன்னன்- நடிகையுடனான ஆடியோ கசிந்தது!!

சுகேஷ் சந்திரசேகர் வழக்கு விவகாரத்தில் நடிகையுடனான ஆடியோ வெளியானது...

" நீங்கள் விரும்பியதை நான் கொடுப்பேன்” மோசடி மன்னன்- நடிகையுடனான  ஆடியோ  கசிந்தது!!

மோசடி மன்னன் என்று அழைக்கப்படும் சுகேஷ் சந்திரசேகர் வழக்கு விவகாரத்தில் அதிரடி திருப்பங்களும், புதுப்புது தகவல்களும் தினந்தோறும் வெளியாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி லீனா மரியா பால். அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாக கூறி இவர் தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக ஏற்கனவே புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

அ.தி.மு.க. பிளவுபட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி.தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

அப்போது, அவர் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் சென்னை, பெங்களூரு பங்களாக்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கணக்கில் வராத 2 கிலோ தங்கம், ரூ.82.5 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையே, சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பண மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் உள்பட 6 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. 

இப்படி பண மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மாட்டிக்கொல்வது தொடர்கதையாக இருக்கும் பச்சத்தில், அவருடைய வழக்கு விவகாரத்தில் அதிரடி திருப்பங்களும், புதுப்புது தகவல்களும் தினந்தோறும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் நடிகை நோரா பதேஹிக்கும் சுகேஷுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தெரியவந்த நிலையில் நடிகை நோராவை நேரில் அழைத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த மாடல் அழகியான நோரா பதேஹி அமலாக்கத்துறையின் தரப்பு சாட்சியாக மாறி விசாரணைக்கு ஒத்துழைத்து சில தகவல்களை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர் தனக்கு பிஎம்டபிள்யூ கார் ஒன்றையும், அவரின் மனைவியும் நடிகையுமான லீனா மரியா பால் தனக்கு விலையுயர்ந்த பேக் ஒன்றையும் பரிசளித்ததாக தெரிவித்திருக்கிறார்.

மேலும். கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்குமாறு சுகேஷின் மனைவி லீனா மரியா பால் தனக்கு அழைப்பு விடுத்திருந்ததாக நடிகை நோரா தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், நோரா பதேஹிக்கும் சுகேஷ்க்கும் இடையே நடைபெற்ற ரேஞ்ச் ரோவர் கார் பற்றி விவாதிக்கும் அரட்டை கசிந்துள்ளது. அதில் "உனக்கு இது பிடிக்குமா?" சுகேஷ் சந்திரசேகர் நோரா பதேஹியிடம் ரேஞ்ச் ரோவர் பற்றி கேட்கிறார். அதற்கு பதிலளித்த நோரா "ஆம், இது ஒரு நல்ல கரடுமுரடான கார். இது அழகாக இருக்கிறது, இது ஒரு ஸ்டேட்மென்ட் கார்" என்று கூறியுள்ளார். "நான் உங்களுக்கு நீங்கள் விரும்பியதை கொடுப்பேன் என பதேஹியிடம் சுகேஷ் கூறும் படியான ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்ந்து மோசடியில் சிக்கும் சுகேஷ் சந்திரசேகரின் வழக்கில் புதியதாக ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.