கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு...மகனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் கவனம்...ஆவேசமடைந்த அண்ணாமலை!

கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு...மகனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் கவனம்...ஆவேசமடைந்த அண்ணாமலை!

கொடுத்த வாக்குறுதிகளை  காற்றில் பறக்கவிட்ட திமுக அரசு, அதனை நிறைவேற்றுமாறு  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  வலியுறுத்தியுள்ளார்.

கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்ட திமுக அரசு:

திமுக தேர்தல் வாக்குறுதி தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு வாக்களித்த பொதுமக்களை வஞ்சித்து வரும் இந்தத் திறனற்ற திமுக அரசு, அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் கூட விட்டுவைப்பதாக இல்லை. ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மறந்திருக்கலாம். பொதுமக்கள் இன்னும் மறக்கவில்லை. 

வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தோரின் எண்ணிக்கை:

2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை 8,60,000. பதிவுசெய்தோரில் வெறும் 2000 பேருக்கு மட்டுமே கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆண்டு TNPSC வழங்கிய அட்டவணையின்படி வெறும் 1752 பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளுக்கு எவ்வித சம்மந்தமும் இல்லாத சூழலே நிலவி வருகிறது. 

இதையும் படிக்க: அதிமுக திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக...3 கோடி ரூபாயை வீணடித்தது ஏன்? கேள்வி எழுப்பிய எடப்பாடி!

மகனின் அமைச்சர் பதவியில் கவனம் செலுத்தும் முதலமைச்சர்:

விளம்பரங்களை மட்டுமே தேடி செல்லும் இந்த திறனற்ற திமுக அரசு முதலீடுகளை ஈர்ப்பதில் எவ்வித ஆர்வமும் காட்டுவதாக தெரியவில்லை. தனது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததால் மக்களை மறந்து விட்டார் முதலமைச்சர். பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த முடியுமா முடியாதா என்ற எந்த புரிதலும் இல்லாமல், அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்குடன் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்கிறார் திறனற்ற திமுக அரசின் நிதி அமைச்சர்.

அகவிலைப்படி காலம் தாழ்த்தும் அரசு:

அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 01.01.2022 அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை 01.07.2022 என காலம் தாழ்த்தி வழங்கியது தமிழக அரசு. ஆனால், 6 மாத காலம் தாழ்த்தியதற்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவை தொகையை இப்போது வரை வழங்கவில்லை. மேலும், 01.07.2022 வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது திறனற்ற திமுக அரசு. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், உள்கட்டமைப்பை மேம்படுத்த செலவு செய்யாமல், அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வும் நிலுவை பாக்கியும் வழங்காமல் ஆண்டின் இறுதியில் நிதி பற்றாக்குறையை குறைத்து விட்டோம் என்று பொய்யான பிம்பத்தை கட்டமைக்க நீங்கள் பாடுபட்டு வருகிறீர்கள். மக்களை நீண்ட நாட்களுக்கு ஏமாற்றமுடியாது என்பதை திமுக உணரவேண்டும். நீங்கள் உணரவில்லையெனில் கடந்த காலத்தில் மக்கள் தங்களுக்கு உணர்த்தியதை போல் மீண்டும் உணர்துவார்கள். 

இதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவை தொகையினை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என அண்ணாமலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.