ஹெச்.ராஜாவுக்கு ஆப்பு வைத்த காவல்துறை

உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்திப் பேசிய ஹெச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  

ஹெச்.ராஜாவுக்கு ஆப்பு வைத்த காவல்துறை

உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்திப் பேசிய ஹெச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற ஊர்வலத்தின்போது மேடை அமைத்து பேசுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்போதைய பிஜேபி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா காவல்துறையை கண்டித்ததுடன், நீதிமன்றத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இழிவான சொற்களில் விமர்சித்தார். அந்த விவகாரம் தொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் திருமயம் காவல் நிலையம் விசாரித்த வழக்கில், விசாரணையை முடித்து விரைவில் ஹெச்.ராஜா மீது குற்றப்பத்திரிகையை  தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி  வழக்கு தாக்கல் செய்யபட்டது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2 மாதத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனல் 3 வருடங்களுக்கு மேலாக காவல்துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் மேலும் மேலும் கால அவகாசம் கேட்டு நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமலதா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பான உத்தரவை ஏப்ரல் 27ம் தேதிக்குள்ளாக நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதி இளங்கோவன் முன்பாக விசாரணைக்கு வந்தது அப்போது உயர்நீதிமன்றத்தை இழிவுபடுத்திப் பேசிய எச் ராஜா மீது திருமயம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் அன்பு நிதி தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் குற்றப்பத்திரிக்கை நகலை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.