ஆ.ராசா வழக்கு: ஏழு வருடத்திற்கு பிறகு சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை...!

ஆ.ராசா வழக்கு: ஏழு வருடத்திற்கு பிறகு சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை...!

முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மீது சொத்து குவிப்பு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.அத்துடன், குற்றப் பத்திரிக்கையில் ஆ.ராசா 5.53 கோடி அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாகவும் கண்டுபிடித்துள்ளது.

ஆ.ராசா மீது சிபிஐ வழக்கு :

கடந்த 2015 ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் , மற்றும் தற்போது நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஆ ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம் சுமத்தி, சிபிஐ அவர் மீது வழக்கு ஒன்றை பதிவு செய்தது. அதில் ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, ராஜாவின் உறவினர் பரமேஷ்குமார், அவரது நெருங்கிய கூட்டாளி கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் சில தனியார் நிறுவனங்களையும் இணைத்து மொத்தமாக 16 பேர் மீது இந்தக் குற்றவழக்கு  பதிவுப்செய்யப்பட்டுள்ளது.

சிபிஐ சோதனை:

இந்த வழக்கின் பின்னணியில், ஆ.ராசாவுக்கு சம்பந்தப்பட்ட  20 இடங்களில் சி.பி.ஐ. சோதனையும்  நடத்தியது. அதுமட்டுமல்லாமல், குற்றம் சாட்டப்பட்டுள்ள 16 பேரின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் நடைபெற்ற இந்த சோதனைகள், டெல்லி, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டன. குறிப்பாக, சென்னையில் 6 இடங்களில் நடைபெற்ற சிபிஐ சோதனைகளில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிஐ-யின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏழு வருடத்திற்கு பிறகு சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை:

இந்நிலையில் ஆ ராசா மீது போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு கிட்டதட்ட ஏழு வருடத்துக்கு பின்பு தற்போது விசாரணை முடிந்துள்ளது. அதில் முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ ராசா உள்ளிட்ட ஐந்து பேர் மீது சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் குற்றம் சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் சுமார் 5.53 கோடி அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாகவும்  குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ தெரிவித்துள்ளது. இதனிடையே இந்த குற்ற பத்திரிக்கைக்கு எதிராக ஆராசா தரப்பில் இருந்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க : தினமும் நியூஸ்பேப்பர் வாங்கி வரும் வளர்ப்பு நாய் கமலி...! வைரல் வீடியோ...!

ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு ஆ.ராசா உள்ளிட்டோர் மீது சிபிஐ தொடுத்துள்ள 2-ஜி அலைக்கற்றை குற்ற வழக்கின் விசாரணையில் டெல்லி நீதிமன்றம் ஆ.ராசாவை வழக்கில் இருந்து விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.