திருப்தி அளிக்காத இழப்பீடும்... விவசாயிகள் கோரிக்கையும்....

திருப்தி அளிக்காத இழப்பீடும்... விவசாயிகள் கோரிக்கையும்....

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழ்நாடு அரசு  அறிவித்த நிவாரண தொகை போதாது என்று  பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிவாரணம்:

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

கனமழை:

தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் கொட்டித் தீர்த்த கனமழையால் டெல்டா மாவட்டங்கள் மட்டுமன்றி பல்வேறு பகுதிகளிலும் சம்பா மற்றும் மானாவரி பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.  இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதனையடுத்து, அமைச்சர்கள் தலைமையில் முதலமைச்சர் அமைத்த குழுவினர் பயிர் சேதங்களை ஆய்வு செய்தனர். 

ஆய்வு:

இந்நிலையில், பயிர் சேதம் மற்றும் இழப்பீடு வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.  அப்போது, அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சக்கரபாணி, தலைமைச் செயலாளர், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

இழப்பீடு அறிவிப்பு:

இதனிடையே, கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இழப்பீட்டு தொகை:

சேதமடைந்த பயறு வகைகளுக்கு இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் 50 சதவிகித மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விவசாயிகள் கோரிக்கை:

திடீர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், இந்த தொகை மிகவும் குறைவானது என்றும், இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் விவசாய சங்க ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏக்கர் ஒன்றுக்கு  35 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நன்றியுடன் கோரிக்கை:

இதனிடையெ முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்றுள்ள டெல்மா மாவட்ட விவசாயிகள் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும், இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதையும் படிக்க:   மத வெறுப்பை ஏற்படுத்தியர் உயர்நீதிமன்ற நீதிபதியா?!!