பேருந்து எண் 375 மற்றும் ‘டைரி’ படத்தின் தொடர்பும் பின்னணியும்!!!

தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் ‘டைரி’ படத்தின் கதை, உண்மையான ஒரு ஹாரர் கதையை வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னணியைப் பார்க்கலாம்!!!
பேருந்து எண் 375 மற்றும் ‘டைரி’ படத்தின் தொடர்பும் பின்னணியும்!!!

இன்னிசை பாண்டியன் இயக்கத்தில், அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் தான் ‘டைரி’. ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ள இது, ஒவ்வொரு நொடியும் அடுத்த சீன் என்னவாகும் என இருக்கை நுனியில் அமர வைக்கும் படமாக வெளியாகியுள்ளது. எஸ் கதிரேசன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை எஸ்.பி. ராஜாசேதுபதி தொகுத்துள்ளார், இசை ரோன் ஈதன் யோகன்.

ஒரு பேருந்து பயணம் பற்றிய கதையாக இருக்கும் இதில், அருள்நிதி ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். சென்னை காவல் துறையின் ஆவணங்கள் காப்பகத்தில் எஸ்.ஐ ட்ரெயினிங் முடித்தவர்களுக்கு ஒரு அசைன்மெண்ட் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, இது வரை முடிக்கப்படாத வழக்குகளைத் தேர்ந்தெடுத்து அதனை முடிக்க வேண்டுமென அருள்நிதி உட்பட அங்கிருக்கும் அனைத்து காவலர்களுக்கு நியமிக்கப்படுகிறது.

அதில், கண்ணை மூடிக் கொண்டு ஒரு ஃபைலை எடுக்கிறார் அருள்நிதி. அது, 16 வருடங்களாக முடிக்கபடாத ஒரு மர்ம வழக்கு என்பதனால், அதனை முடிக்க மேட்டுப்பாளையம் செல்கிறார் அவர். அங்கு நடக்கும் மர்ம சம்பவங்கள் தான் படத்தின் கரு. அப்போது, ஒரு பேருந்து பயணம், கதையின் தொடக்கப் புள்ளியான வழக்கை முடிவுக்கு கொண்டு வருகிறதா! இல்லையா! என்பதை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

ஆனால் இந்த கதை, ஒரு உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சீனாவில், பேருந்து எண் 375 என்ற பேய் கதை, உலகம் முழுவதும் மிக பிரபலமானது. மேலும், 27 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவமானது, இன்று வரை தீர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டைரி படத்தில் வரும் கதை, அந்த கதை போலவே இருப்பதாகக் கூறப்படுகிறது.

1995 இல் நடந்தது இந்த சம்பவம். சீனாவின் Fragrant Hills பகுதிக்கு செல்லும் பேருந்து தான் பேருந்து எண் 375. நவம்பர் 14ம் தேதி, யுவான் மிங் ஹுவான் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பிய இந்த 375 பேருந்தின் கடைசி நிறுத்தம் தான் சியாங் ஷாங் பகுதியில் உள்ள Fragrant Hills. பல பயணிகள் ஏரிய இந்த பேருந்தில், இரவு நேரம் என்பதால், ஆங்காங்கே இறங்கியும் உள்ளனர். பின், பெண் நடத்துனர் கொண்ட இந்த பேருந்தில், அவருடன் ஓடுநர் மட்டுமே பயணித்துள்ளார். பின், கடைசி நிறுத்தத்திற்கு ஒரு சில நிறுத்தங்கள் முன்பு, ஒரு காதல் ஜோடி, ஒரு இளைஞர் மற்றும் ஒரு மூதாட்டி ஏறியுள்ளனர்.

இரவு நேரம், அமைதியான பயணம். பாதையும் தனித்து விடப்பட்டிருந்தது. அதிகமாக ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில், திடீரென, பாரம்பரிய சீன உடை உடுத்தி மூன்று பேர் கை காட்டி பேருந்தை நிறுத்தி, அதில் ஏறியுள்ளனர். அந்த மூவரில் ஒருவர் மட்டும் தலை தொங்கி காணப்பட்டிருக்கிறார். அவரைத் தாங்கிப் பிடித்த மற்ற இருவர், மொத்தமாக சேர்ந்து கடைசி சீட்டில் அமர்ந்துள்ளனர். உடனே, குளிர் தாங்க முடியாத அளவிற்கு பனிமழை பெய்திருக்கிறது. திடீரென பேருந்தில் இருந்த மூதாட்டி, தனது பர்ஸ் காணவில்லை என்றும், அதனை கூட பயணித்த இளைஞர் தான் திருடினார் என்றும் கூறி கூச்சலிட்டுள்ளார். மேலும், பேருந்தை காவல் நிலையத்திற்கு எடுத்து செல்லவும் வலியுறுத்தியிருக்கிறார். பேருந்து நடத்துனர் இதற்கு ஒப்புக் கொள்ளாததால், பேருந்தை நடுவிலேயே நிறுத்த சொல்லி, அந்த இளைஞரையும் தன்னுடன் இழுத்துச் சென்றுள்ளார் அந்த மூதாட்டி.

பின், சாலையில் இறங்கிய அவர்களை கடைசி சீட்டில் அமர்ந்திருந்த அந்த தெளிவான இருவரும் முறைத்துப் பார்க்க, அந்த மூதாட்டி மீண்டும் அந்த இளைஞரை திருடன் எனக் கூறி திட்டியும் அடித்தும் இருக்கிறார். அந்த பேருந்து கண் படும் தூரத்தைத் தாண்டியதும், அந்த இளைஞன் மூதாட்டியைத் திட்டி, தன்னை தவறாக குற்றம் சாட்டியதாகக் கூறியதும், அந்த மூதாட்டி மன்னிப்புக் கேட்டுள்ளார். பின், அந்த மூன்று பயணிகளுக்கும் கால்கள் இல்லாததை தான் கவனித்ததாகவும் கூறினார். மேலும், அவை மனிதர்கள் அல்ல என்றும், பேய்கள் என்றும் கூறிய மூதாட்டி, அவரைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் தான், அவர் திருடியதாக பொய் சொன்னதாகவும் கூறினார்.

பின், இருவரும் அங்கிருந்து தங்களது ஊருக்கு நடந்தே சென்றுள்ளனர். அடுத்த நாள் காலை, செய்திகளில் அந்த பேருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்டதை அடுத்து, அந்த மூதாட்டியும் இளைஞரும் காவல்துறைக்கு, தங்களுக்கு தெரிந்தத் தகவல்களை தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அவர்கள் இறங்கிய பகுதிக்கு அருகில் பேருந்தைத் தேடிய போது, அந்த பேருந்து, அந்த மூதாட்டியும் இளைஞரும் இறங்கிய இடத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில், 5 சடலங்களுடன் ஒரு நதியில் இருந்து மீடக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிலும் ஒரு பெரிய குழப்பம் என்னவென்றால், ‘ஒரு நாள்’ இறந்த சடலமாக பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உடல்கள் மீட்கப்பட்டது. ஆனால், மற்ற மூன்று பயணிகளான காதல் ஜோடி மற்றும் தலை தொங்கிய பயணியின் உடல்கள் மோசமாக மட்கிய நிலையில் இருந்தது. மேலும், கடைசி சீட்டில் அமர்ந்திருந்த கால் இல்லாத மற்ற இருவரும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அடு மட்டுமின்றி 100 கிலோமீட்டர் வரை அந்த வாகனம் எரிபொருள் இல்லாமல் எப்படி பயணித்தது என பார்க்க, எரிவாயு டாங்கைத் திறந்த போது, மாபெரும் அதிர்ச்சி அதிகாரிகளுக்குக் காத்திருந்தது. ஏன் என்றால், அதில் எரிவாயு இல்லாமல் வெறும் ரத்தம் மட்டுமே இருந்ததாம். பின், அந்த பகுதிக்கு பேருந்தே நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதோடு 27 ஆண்டுகள் கடந்த பிறகும் இக்கதை சீனர்களை கதி கலங்க வைப்பதோடு, மர்மமாகவே இருக்கிறது.

இப்போது புரிகிறதா, டைரில் படம் இது போலவே இருக்கிறது என்று. இந்த கதை இன்று தியேட்டர்களில் ஒரு மாபெரும் ஹிட்டாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்று வருவதைத் தொடர்ந்து, இந்த பேருந்து எண் 375 குறித்த தகவல்களும் இணையத்தில் படு பயங்கரமாக பகிரப்பட்டு வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com