இந்திய அரசியல் சாசனத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கான தனித்தனி அதிகாரங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. அந்த வரையறைக்குள் தான் மத்திய அரசும், அனைத்து மாநிலங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. வேகமாக வளர்ந்து வரும் சூழலில் அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு சில கூடுதலான அதிகாரம் மற்றும் நிதி பங்கீடுகள் தேவைப்படலாம். அதை எடுத்துச் சொல்வதற்கு மக்களவை, மாநிலங்களவை உண்டு; நாடாளுமன்றக் குழுக்கள் உண்டு; நீதிமன்றங்கள் உண்டு. அந்த ஜனநாயக ரீதியான வழிமுறைகளை விட்டு விட்டு தமிழ்நாட்டு மக்களிடத்தில் இந்திய அரசின் மீதான வெறுப்பையும், தமிழ் மாநில பிரிவினை எண்ணங்களை விதைப்பதும், வளர்ப்பதும் மிகப்பெரிய ஆபத்தாக முடியும். இந்திய அரசியல் சாசனம் எழுத்து வடிவிலும், நெகிழும் தன்மையை உள்ளடக்கியது என்ற காரணத்தினால் தான் மத்திய, மாநில அரசுகளைத் தாண்டி கிராம ஊராட்சிகளும், நகராட்சிகளும், பேரூராட்சிகளும் தங்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள, சுயமாகச் செயல்படக் கிராம பஞ்சாயத்து ராஜ், நகர்பாலிகா சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.