அதிபர் பதவியை அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே..!

அதிபர் பதவியை அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே..!

இலங்கையில் வலுத்த மக்கள் போராட்டத்தால், சிங்கப்பூருக்கு தப்பியோடிய நிலையில் இலங்கை அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டை விட்டு தப்பியோடிய அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் தஞ்சம்: 

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பியோடினார். இலங்கையிலிருந்து தனி விமானம் மூலம் மாலத் தீவு தப்பியோடிய அவர் அங்கிருந்து தற்போது சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளார். எனினும் அவருக்கு அரசு சார்பில் அடைக்கலம் அளிக்கவில்லை எனவும் வெளிநாட்டு குடிமகனாகவே அவர் தங்கியுள்ளதாகவும் சிங்கப்பூர் அரசு விளக்கமளித்தது.

அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே:

இந்நிலையில் தனது அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.  அவருடைய அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதம் அவரது செயலாளர் மூலம், சபாநாயகருக்கு அனுப்பட்டதாகவும் அதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் விரைவில் அனைத்து கட்சிகள் உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

ஊரடங்கு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபடும் போராட்டக்காரர்களை எச்சரித்து அனுப்பும் ராணுவ வீரர்கள்: 

இதனிடையே மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு நீடித்து வருகிறது. அரசின் உத்தரவை மீறி ஒரு சில இடங்களில் போராட்டக்காரர்கள் திரண்டுள்ளனர். இதனால், அரசு உத்தரவின் பேரில் சாலைகளில் ராணுவ டாங்கிகளில் வலம் வரும் ராணுவ வீரர்கள், போராட்டக்காரர்களை எச்சரித்து திருப்பி அனுப்புகின்றனர். மேலும் பிரதமர் மாளிகையில் உள்ள அவரது இருக்கையை அபகரிக்காத வகையில் அங்கு ராணுவத்தின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.