ராகுல்காந்தியின் இரண்டாண்டு சிறைதண்டனை உறுதி...தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

ராகுல்காந்தியின் இரண்டாண்டு சிறைதண்டனை உறுதி...தடை விதிக்க நீதிமன்றம்  மறுப்பு!

2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்த ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனுவிற்கு தடை விதிக்க குஜராத் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய ராகுல்காந்தி, ‘ஏன் அனைத்துத் திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டிருக்கின்றனர்’ என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இதனையடுத்து, மோடி சமூகத்தினரை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கில், திடீரென கடந்த மார்ச் மாதம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு அரசியல் வாட்டாரங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, சிறைத் தண்டனைக்குள்ளானதால் ராகுல் காந்தி தன்னுடைய எம்.பி பதவியையும் இழக்க நேர்ந்தது. 

இதையும் படிக்க : மருத்துவப் படிப்புகளுக்கு நெக்ஸ்ட் தேர்வு: மாநில உரிமைப் பறிப்பு; மாணவர்களுக்கு மன உளைச்சல்!

பின்னர்,  2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்த ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்தது. தொடர்ந்து, மேல்முறையீட்டு மனுவில் சூரத் அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குஜராத் (சூரத்) உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்த ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை என்ற சூரத் அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. தண்டனையை நிறுத்தி வைக்க உரிய காரணங்கள் இல்லை என்பதால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்த ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார். இதனால் ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு தொடர்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான தீர்ப்புக்கு பிறகு, குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராகுல்காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.