அவர் தான் பெரியார்!

பகுத்தறிவு கருத்துக்களின் மூலம் சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை விளைவித்த தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாள் இன்று. சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் இந்த இனிய நாளில் தந்தை பெரியாரை நினைவு கூறுவோம்.

யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், ஏன்.. நானே சொன்னாலும் உன் புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.. பெரியாரின் பொன்மொழிகளில் ஒன்று இது.

யாரோ எழுதி வைத்த வேதங்களை, யாரோ கூறிய வேதாந்தங்களை எல்லோருக்கும் நன்மை பயக்கும் என்றால் அது சரி.. ஆனால் இங்கு வேதங்களும் வேதாந்தங்களும் மனிதரிடையே பிரிவைத்தானே உண்டாக்குகின்றன? பின்னர் எதற்காக வேதாந்தம் வெங்காயம் என கேள்வி எழுப்பி சமத்துவத்தை போதித்த சமகால புத்தர்தான் பெரியார். 

மதம் மனிதனை மிருகமாக்கும், சாதி மனிதனை சாக்கடையாக்கும் என பெரியார் உதிர்த்த வார்த்தைகள் தற்போது வரை உண்மையாகி வருகின்றன.  தன் கொள்கைகளின் மூலம் ஆண்டாண்டு காலம் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார் பெரியார். 

செழிப்பான குடும்பத்தில் பிறந்தபோதும் சமூகத்தில் நிலவுகிற ஒடுக்குமுறைகளை எதிர்த்து களம் கண்டார் பெரியார். பழமையான குடிகள் என்ற பெருமையைப் பெற்றபோதும், இதுநாள் வரை மேல் கீழ் என வரையறுக்கப்பட்டதே மன்னிக்க முடியாத பாவம் என பொங்கினார் பெரியார். 

முதுமையிலும் தள்ளாடியவாறு சாதிய இழிவில் இருந்து விடுதலை பெறாமல் சாகிறேனே என வெதும்பியவர். அரசியல் பதவிகள் அவரைத் தேடி வந்தபோதும் கிஞ்சித்தும் சபலம் கொள்ளாதவர் பெரியார். பெரியார் என்பவரை ஒற்றை மனிதர் என்ற வட்டத்துக்குள் அடைப்பதென்பது பெருங்கடலை பேனா குடுவைக்குள் அடைப்பது போலாகும்.

ஏனெனில் பெரியார் ஒற்றை மனிதர் அல்ல. கோடிக்கணக்கானோரின் வெளிப்பாடு. சமூகநீதியின் பிறப்பிடம். பெண் விடுதலையின் பெரும் குன்று. முற்போக்கு சிந்தனையின் மூத்த குலம். தமிழ்நாட்டில் திராவிடம் என்ற சொல்லி அறிமுகப்படுத்தியதோடு அரசியலின் புதிய அரிச்சுவடியை படைத்த பகுத்தறிவு பகலவனுக்கு இன்று 145-வது பிறந்தநாள். 

பெண்விடுதலை ஒன்றே பெரியாரின் பெருங்கனவு.. சாதியை சொல்லி அடக்க நினைப்பவன் மிரளும் போது, மதம் என்ற பெயரில் பிரிவினையை உண்டாக்க நினைக்க சிலர் அஞ்சும் போது, பெண்களை அடிமைப்படுத்த பித்தர்கள் சிலர் முடிவெடுத்தும் தயங்கும் போது அங்கு விஸ்வரூபமாய் காட்சியளிக்கிறார் பெரியார். 

இதையும் படிக்க: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்; நிறைவேறத் தயாராகும் மசோதாக்கள்?