கைதிகளுடன் இனி நேர்காணலில் பேசலாம்! ஆனால் ஒரு கண்டீஷன்!!

தமிழகத்தில் சிறைக்கைதிகள் குடும்பத்தினருடனான நேர்காணல் வருகிற 16-ம்தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் அறிவித்துள்ளார்.

கைதிகளுடன் இனி நேர்காணலில் பேசலாம்! ஆனால் ஒரு கண்டீஷன்!!

தமிழக சிறைகளில்  கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி முதல் சிறை கைதிகளுக்கு  உறவினர்களுடனான நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக வழக்கமான தொலைபேசி அழைப்புகளுடன், சிறைகளுக்கு ஆன்ட்ராய்டு கைப்பேசிகள் வழங்கப்பட்டு, சிறைவாசிகள் அவர்களின் உறவினர்களுடன் வீடியோ கால் செய்யவும், e-Mulakat வசதியின் வாயிலாக காணொலி மூலம் நேர்காணல் செய்யவும் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

நேர்காணலை மீண்டும் தொடங்கக்கோரி சிறைகைதிகளின் உறவினர்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதையும், கொரோனா வைரஸ் பரவும் வீதம் படிப்படியாக குறைந்து வருவதையும், மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பி வருவதையும், சிறைகைதிகளின் நலனை கருத்தில் கொண்டு, சிறைகைதிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனான நேரடி நேர்காணலை 16.8.2021 முதல் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மீண்டும் தொடங்கப்படுவதாக  தமிழக சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் அறிவித்துள்ளார். சிறை கைதிகளின் நேர்காணலின் போது பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைகள் குறித்த வழிமுறைகளை காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் சுனில் குமார் சிங் அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுக்கும் வழங்கியுள்ளார். அதன்படி சிறைகைதிகளை நேர்காணல் செய்ய விரும்பும் பார்வையாளர்கள் risons Visitors Management System" அல்லது அந்தந்த சிறைகளின் தொலைபேசி மூலம் குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்பதிவு செய்ய வேண்டும் மற்றும் சிறைக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக வருகை தர வேண்டும். ஒரு சிறைகைதிகளை காண அதிகபட்சமாக இரண்டு பார்வையாளர்கள் மட்டுமே நேர்காணலின்போது அனுமதிக்கப்படுவர். ஒரு சிறைகைதிக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே நேர்காணல் அனுமதிக்கப்பட வேண்டும். 

சிறைகைதிகளை நேர்காணல் செய்ய விரும்பும் பார்வையாளர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ் (அல்லது) 72 மணி நேரத்திற்குள் கொரோனா RT-PCR பரிசோதனை செய்து தொற்று இல்லை என அளிக்கப்பட்ட சான்றிதழ் இவற்றுள் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து ஏனைய நாட்களில் காலை 9  மணி முதல் மதியம் 2 மணி வரை நேர்காணல் 15 நிமிடங்கள் அனுமதிக்கப்படும். உடல் வெப்பநிலை சோதனை, கைகளை கத்தம் செய்த பிறகு பார்வையாளர்கள் முகக்கவசத்துடன் சிறையினுள் அனுமதிக்கப்படுவர். கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு நேர்காணலின்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள், நேர்காணல் மனுக்கள் ஆகியவற்றை சிறைத்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மனுக்கள் இலவசமாக பார்வையாளர்கள் அறையின் நுழைவாயிலில் வழங்கப்படும். www.prisons.tn.gov.in பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் தெரிவித்துள்ளார்.