திமுகவுக்கு அப்போ ஒரு பேச்சு...இப்போ ஒரு பேச்சு...அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ்!

திமுகவுக்கு அப்போ ஒரு பேச்சு...இப்போ ஒரு பேச்சு...அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ்!

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக திமுக தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்மையின் மறுஉருவம்:

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக திமுக, கொடுத்த வாக்குறுதியை  நிறைவேற்றவில்லை என ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை ஓபிஎஸ் தற்போது வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்பது மக்களை எப்படியாவது ஏமாற்றி ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காக தயாரிக்கப்பட்டதே தவிர, அதில் உண்மை என்பது சிறிதளவு கூட இல்லை என்பதை ஒன்றரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியின் நடவடிக்கைகள் உணர்த்தியுள்ளன. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையினை பொய்மையின் மறுஉருவம் என்று சொன்னால் அது மிகையாகாது. இதற்கு ஒரு உதாரணம்தான் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்காதது தான்.

குரல் கொடுத்த திமுக அரசு:

2020 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கக் கோரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது, அதற்கு ஆதரவாக குரல் கொடுத்ததோடு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 80,000 ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், போராட்டத்தை கைவிட வேண்டுமென்றும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

தங்கம் தென்னரசு பேச்சு:

இதுகுறித்து 06-06-2018 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசிய அப்போதைய தி.மு.க. உறுப்பினரும், தற்போதைய தொழில் துறை அமைச்சருமான திரு. தங்கம் தென்னரசு அவர்கள், "weightage" முறையை தயவுசெய்து நீக்குங்கள், "weightage" முறையினாலேதான் இந்த நாட்டிலே பல இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இன்றைக்கு இந்த வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.  

இதையும் படிக்க: மீண்டும் ஒரு நேதாஜியா சசி தரூர்!!!கட்சியால் ஓரங்கட்டப்படும் காரணமென்ன!!!

திமுக அரசின் தேர்தல் அறிக்கை:

இதனைத் தொடர்ந்து, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், 2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலைவாய்ப்பினைப் பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நேர்மாறாக செயல்பட்ட திமுக அரசு:

இன்று திமு.க. ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை போட்டித் தேர்வின்றி பணியமர்த்துவது குறித்தோ அல்லது "weightage"-ஐ நீக்குவது குறித்தோ எந்தவிதமான அறிவிப்பையும் தி.மு.க. அரசு வெளியிடவில்லை. மாறாக, அத்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு  ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறது. 

கண்டனம் தெரிவிக்கும் ஓபிஎஸ்: 

"ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்' என்று மத்திய அரசு உத்தரவிட்டு ஓராண்டு கடந்த நிலையில், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள போட்டித் தேர்வினை ரத்து செய்துவிட்டு, தேர்ச்சி மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். எனவே, மாநில அரசு இம்முறையை ரத்து செய்து தேர்வில் தேர்ச்சியான அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.