”சொல் ஒன்று; செயல் வேறு” தலைமை நீதிபதியாக ரமணா சாதித்தது என்ன!!!

”சொல் ஒன்று; செயல் வேறு”  தலைமை நீதிபதியாக ரமணா சாதித்தது என்ன!!!

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவிக்காலம் 26 ஆகஸ்ட் 2022 அதாவது இன்றுடன் ஓய்வு பெற இருக்கிறார். அவருடைய பதவிக்காலத்தில் அவர் அதிக அளவில் சீர்திருத்தங்கள் குறித்து பேசியுள்ளார். ஆனால் நடைமுறையில் ஒன்றும் இல்லை என்ற விமர்சனமே அவர் முன் வைக்கப்பட்டுள்ளது.

நீதிபதி என்.வி.ரமணா தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றது முதல் இன்று வரை 29 சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவற்றின் சட்டத்தின் வழி ஆட்சி எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்தும் அரசியலமைப்பைக் காப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதைக் குறித்தும் அதிக அளவில் பேசியுள்ளார்.

பேச்சில் இருந்த உத்வேகம் செயல்பாட்டில் இல்லை என்றே கூற வேண்டும். முந்தைய தலைமை நீதிபதிகளால் நிலுவையில் விடப்பட்டிருந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 6 வழக்குகளும் நீதிபதிகள் அமர்வு மூலம் விசாரிக்கப்பட வேண்டிய மறு ஆய்வு தேவைப்படும் 53 வழக்குகளும் இன்றளவும் நிலுவையிலேயே உள்ளன. 

”சட்டமன்றம் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் நீதித்துறையின் நீதிப்புனராய்வு என்பது அரசியலமைப்பு சட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நீதி புனராய்வு என்பது அரசியலமைப்பு சட்டத்தின் இதயம் மற்றும் ஆன்மா என்று நான் கூறுவேன். எனது எண்ணங்களின் படி, நீதிப்புனராய்வு என்ற ஒன்று இல்லாதிருந்தால் அரசியலமைப்பு சட்டத்தின் மீது மக்களின் நம்பிக்கை குறைந்திருக்கும்”

தலைமை நீதிபதி என்.வி.ரமணாவால் ஆற்றப்பட்ட 29 சொற்பொழிவுகளில் ஒரு சொற்பொழிவின் சிறியே பகுதியே இந்த உரை.

ரமணா தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 53 வழக்குகளில் நீதிப்புனராய்வு அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. மேலும் பல வழக்குகளில் பல வழக்குகளில் நீதிபதிகள் அமர்வு தேவைப்படவில்லை எனினும் அவை நாடு முழுவதும் பரவலான தாக்கங்கள் கொண்டவை மற்றும் தேசிய் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

இந்த 53 சவால் நிறைந்த வழக்குகளும் ரமணாவிற்கு முந்தைய நீதிபதிகளால் செய்யப்பட்டதைப் போன்று இன்றளவும் நிலுவையிலேயே உள்ளன.  ஆய்வு தரவுகளின் படி சில வழக்குகளில் மட்டுமே சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  இங்கு நமது விவாதத்திற்காக ஆறு வழக்குகளைக் குறித்தும் அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் ஆராயலாம்.

1.  ஜம்மு காஷ்மீரின் 370வது சட்டப்பிரிவு ரத்து

2.  அரசியல் நிதியை ஊக்குவிப்பதற்கு ஆதரவான தேர்தல் பத்திரங்களுக்கான சவால்

3.  அரசு கல்வி நிறுவனங்களில் முஸ்லீம் மாணவர்களுக்கு ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக அரசு விதித்துள்ள தடை

4.  மத்திய அரசின் இடஒதுக்கீடு கொள்கை பொருளாதார அள்வுகோலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.  ஜாதியை அடிப்படையாக கொண்டது அல்ல

5.  சட்ட விரோத நடவடிகைகள் தடுப்பு சட்டம்,1967.  கருத்து வேறுபாடுகளை அடக்குவத்ற்கான கருவி என விமர்சனம்

6.  குடியுரிமை திருத்த சட்டம்,2019.  அண்டை நாடுகளை சேர்ந்த முஸ்லீம் அல்லாதவர்களுக்கு மட்டும் விரைவான குடியுரிமை

“மாஸ்டர் ஆஃப் தி ரோஸ்டர்” (பட்டியலின் மாஸ்டர்) என தலைமை நீதிபதிகள் அழைக்கப்படுகின்றனர்.  அரசியல் சாசன அமர்வு உட்பட குறிப்பிட்ட வழக்குகளை விசாரணை செய்யும் அமர்வுகளை அமைக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு உள்ளது.  வழக்குகள் விசாரணைக்காக பட்டியலிடப்படாதபோது விசாரணை அதிகாரம் நீதிபதியிடம் உள்ளது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு ரமணாவால் அமைக்கப்பட்டது. இந்த அமர்வு செப்டம்பர் 2021ல் மாநில மின்சார ஒழுங்குமுறை நிறுவனமான ‘குஜராத் உர்ஜால் விகாஸ் நிகாம் லிமிடெட்’ மற்றும் மின் உற்பத்தி நிறுவனமானஅதானி பவர் லிமிடெட்’ இடையேயான ஒப்பந்தங்கள் தொடர்பான சிக்கல்களை மறு ஆய்வு செய்து இறுதிகட்ட விசாரணை செய்தது.  வழக்கு நிலுவையில் இருந்ததைத் தொடர்ந்து பிப்ரவ்ரி 2022ல் அந்த இரண்டு நிறுவனங்களூமே அவர்களுக்குள் சமரசம் செய்து வழக்கை திரும்ப பெற்றன.

சமீபத்தில் அவர் ஓய்வு பெற நான்கு நாள்கள் இருந்த நிலையில் 22 ஆகஸ்டு 2022 அன்று டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான நிர்வாகம் தொடர்பான கட்டுபடுகள் குறித்த வழக்கை விசாரணை செய்ய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைத்துள்ளதாக கூறியிருந்தார்.  ஆனால் இன்று வரை விசாரணை தொடங்கபடவில்லை.

சீர்திருத்தங்களுக்கான நீண்டகால கோரிக்கைகள், வழக்குகளை பட்டியலிடுவதில் வெளிப்படைத்தன்மை,  நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் அமைப்பின் வெளிப்படை தன்மை, நீதிபதிகளின் தேர்வுக்கான அளவுகோல்களை நிர்ணயித்தல் ஆகியவற்றை சரிசெய்ய தவறிய தோல்வியுற்ற நீதிபதி ரமணா.

அரசாங்க நடவடிக்கைகளுக்கு எதிராக மனு அளித்தவர்கள் பல மாதங்கள், பல ஆண்டுகளாக விசாரணைக்காக காத்திருக்கும் மனுதாரர்கள் நீதித்துறையுடன் நெருக்கமான உறவு கொண்டிருக்கும் வழக்கறிஞர்களுடன் ஏற்பட்ட உரையாடல்களின் போது அவர்களிடமிருந்து இரண்டு விதமான உணர்வுகள் வெளிப்பட்டன.  ஒன்று ஏமாற்றம் மற்றொன்று சிறிய நம்பிக்கை.

1.  ஜம்மு- காஷ்மீரின் சட்டப்பிரிவு 370 ரத்து:  1,115 நாட்களாக நிலுவையில் உள்ளது:

ஒரு மாநிலத்தின் தரநிலையை யூனியன் பிரதேசமாக குறைப்பது அரசியலமிப்பிற்கு முரணானது எனக் கூறிய ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மாநிலத்தின் அரசியலமைப்பு அவையின் ஒப்புதல் இல்லாமல் சட்டப்பிரிவு 370ஐ திருத்த முடியாது என நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.  ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநரால் திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பெயர்:  மனோகர் லால் Vs யூனியன் ஆஃப் இந்தியா

கடைசியாக நடைபெற்ற விசாரணையின் நீதிபதிகள்:  தலைமை நீதிபதி ரமணா, நீதிபதி எஸ். கே. கவுல், நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி நீதிபதி பி. ஆர். கவாய் மற்றும் நீதிபதி சூர்ய காந்த்.

முதல் விசாரணை தேதி: 16 ஆகஸ்டு 2019

கடைசியாக நடைபெற்ற விசாரணையின் தேதி:  02 மார்ச் 2020 (30 மாதங்களுக்கு முன்பு)

மொத்த விசாரணைகள்: 11

பட்டியலிட கோரிக்கை: 25 ஏப்ரல் 2022, தலைமை நீதிபதி ரமணா முன்

ரமணாவின் பதில்: “ நான் பார்க்கிறேன்”

“ சட்டத்தின்படி ஆட்சி மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முக்கிய சவால்களில் ஒன்று அனைவருக்கும் விரைவான நியாயமான நீதியை வழங்குவதற்கான நீதி அமைப்பின் இயலாமை ஆகும்”

                                                                -நீதிபதி ரமணா, ஸ்ரீநகர்(14 மே 2022)

குடியரசு தலைவரின் உத்தரவின் படி, ஆகஸ்டு 5,6 ஆகிய தேதிகளில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019ன் படி இரண்டு யூனியன் பிரதேங்களாக உடைக்கப்பட்டது.

இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவில்லை.  2019 மற்றும் 2020 ஆண்டுகளில் இந்த வழக்கிற்கான அரசியல் சாசன அமர்வின்போது தலைமையேற்றவர் தலைமை நீதிபதி ரமணா.  கடைசியாக மார்ச் 2020 அன்று கூடியபோது வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு விடுத்த கோரிக்கையை அது நிராகரித்தது.

இந்த வழக்கை மீண்டும் பட்டியலிட ஏப்ரல் 2022ல் ட்ய்ஹலைமை நீதிபது ரமணா முன் கோரிக்கை வைக்கப்பட்டது.  ஆனால் அவரிடமிருந்து வந்த பதில் “பார்க்கலாம்”.  இன்று வரை வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

2.  தேர்தல் பத்திரங்களுக்கான சவால்: 1,816 நாட்களாக நிலுவையில் உள்ளது:

தேர்தல் பத்திரங்கள்  மீதான அரசியல் நிதியுதவி ஜனநாயகத்திற்கு கேடு விளைவிப்பதாகவும் பண மசோதாவாக நிறைவேற்றப்பட்டதால் சட்டவிரோதமானது என்றும் மனுதாரர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வழக்கின் பெயர்:  அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் Vs யூனியன் ஆஃப் இந்தியா

கடைசியாக நடைபெற்ற விசாரணையின் நீதிபதிகள்:  முன்னாள் தலைமை நீதிபதி எஸ். ஏ. போப்டெ,  நீதிபதி ஏ.எஸ். போபண்ணா, நீதிபதி வி. ராமசுப்பிரமணியம்

முதல் விசாரணை தேதி: 05 ஏப்ரல் 2019

கடைசியாக நடந்த விசாரணையின் தேதி: 29 மார்ச் 2020(30 மாதங்களுக்கு முன்பு)

மொத்த விசாரணைகள்: 08

கடைசியான கோரிக்கை: 25 ஏப்ரல் 2022

ரமணாவின் பதில்: “வழக்கை எடுத்து கொள்கிறேன்”

“குடிமக்கள் சட்டத்தின் விதியை அறிந்திருப்பதன் மூலமும் அவர்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படுவது மூலமும் தேவைப்படும் போது நீதியை வலியுறுத்துவதன் மூலமும் சட்ட விதியை பலப்படுத்த முடியும்”

                                  -நீதிபதி ரமணா, பி. டி. தேசாய் நினைவு சொற்பொழிவு, 30 ஜூன் 2021

மத்திய அரசால் 02 ஜனவரி 2018 அன்று  அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரங்கள் குறித்த மசோதாவை மனுதாரர்கள் எதிர்த்து மனு செய்தனர்.  இது பெயர் தெரியாத பெருநிறுவனங்களின் கணக்கில் காட்டப்படாத நிதியை  அரசியல் கட்சிகளுக்கு அனுமதித்தது என்றும், மற்றும் நிதி மசோதாவாக தவறாக நிறைவேற்றப்பட்டது என்றும் வாதத்தை முன்வைத்தனர். 

இந்திய தேர்தல் ஆணையம் இந்த திட்டத்தை "நன்கொடைகளின் வெளிப்படைத்தன்மையைப் பொறுத்தவரை இது ஒரு பிற்போக்கு நடவடிக்கை" என்று விவரித்தது மற்றும் அதை திரும்பப் பெற கோரிக்கை விடுத்தது.

2019 ஏப்ரலில் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வும் மார்ச் 2021ல் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வும் மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்தது.

"இதன் தாக்கம் என்னவென்றால், இந்தத் திட்டம் இன்னமும் தொடர்கிறது, மேலும் கணக்கில் காட்டப்படாத பணம், அதன் ஆதாரம் அரசாங்கத்தைத் தவிர, ஆளும் கட்சிக்குச் செல்வதன் மூலம் அரசியல் கட்சிகளுக்குத் தொடர்ந்து பலனளிக்கிறது" என்று  இந்த வழக்கில் மூன்று மனுதாரர்களில் ஒருவரான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்க நிறுவன உறுப்பினர் ஜக்தீப் சோக்கர் கூறியுள்ளார்.

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஏப்ரல் 5, 2022 அன்று,  , இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுமாறு தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு வேண்டும் என கோரிக்கை வைத்தார்.  கல்கத்தாவை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம், கலால் சோதனைகளை நிறுத்தும் நோக்கத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் 40 கோடி ரூபாய் செலுத்தியது என்று அவர் மேற்கு வங்கத்தில் நடந்த நிகழ்வை உதாரணமாக மேற்கோள் காட்டியுள்ளார். 

"இது ஜனநாயகத்தை சிதைக்கிறது" என்று பூஷன் ரமணாவிடம் கூறியுள்ளார்.

வழக்கை விசாரிப்பதில் தாமதம் காட்டுவதாக ரமணா மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார் . ஆனால் ரமணா வாக்குறுதி அளித்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும் எந்த விசாரணையும் இதுவரை இல்லை.

"குறைந்தது ஐந்து முதல் ஆறு முறை வழக்கை பட்டியலிட முயற்சித்தோம், ஆனால் பயனில்லை" என்று சோகர் கூறியுள்ளார்.  மேலும் "ஏப்ரல் 2019 இல், உச்சநீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்ட மனுவில் இந்த மசோதா 'நாட்டின் தேர்தல் செயல்முறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்' என்றும் முக்கியமான பிரச்சினைகளை எழுப்பும் என்றும் குறிப்பிட்டிருந்ததாக கூறியுள்ளார். மேலும் “நான் கேட்கிறேன், இந்த முக்கியமான பிரச்சினைகள் அவசர விசாரணைக்கு உத்தரவாதம் அளிக்கவில்லையா? நான் வருத்தமாகவும்  ஏமாற்றமாகவும் இருக்கிறேன். நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம்." என்றும் சோகர் கூறியுள்ளார்.

3. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திற்கு  எதிரான சவால்: 1,105 நாட்களாக நிலுவையில் உள்ளது

இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான,  சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் விதிகள் தெளிவற்றதாகவும், பேச்சு சுதந்திரத்தை மீறுவதாகவும், மேலும் "நீதித்துறையின் பயன்பாடு" இல்லாமல் அரசுக்கு பரந்த அதிகாரங்களை வழங்குவதாகவும் மனுதாரர்கள் அவர்களது வாதத்தை முன்வைத்துள்ளனர்.

வழக்கின் பெயர்: சஜல் அவஸ்தி vs யூனியன் ஆஃப் இந்தியா

கடைசியாக நடைபெற்ற விசாரணையின் நீதிபதிகள்: முன்னாள் தலைமை நீதிபதி கோகோய் மற்றும் நீதிபதி அசோக் பூஷன்.

முதல் விசாரணை தேதி: 9 செப்டம்பர் 2019

கடைசியாக நடைபெற்ற விசாரணையின் தேதி: முதல் விசாரணைக்குப் பிறகு (35 மாதங்களுக்கு முன்பு)

மொத்த விசாரணைகள்: 1

பட்டியலிடுவதற்கான கடைசி கோரிக்கை: தெரியவில்லை

நீதிபதியின் பதில்: NA

"உலகின் குடிமக்களாகிய நாம் அனைவரும், நமது முன்னோர்கள் போராடி பெற்ற சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும் அதனை மேலும் மேம்படுத்தவும் அயராது உழைக்க வேண்டியது அவசியம்."

                          - தலைமை நீதிபதி ரமணா, பிலடெல்பியா, அமெரிக்கா , 26 ஜூன் 2022

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு விதிகளை எதிர்த்து 2019 முதல் பல மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.  குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஆதாரத்திற்கான சுமையை அதிக அளவில் ஏற்றுகிறது என்றும் இது அரசியலமைப்பு விதிகளை மீறுகிறது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

சஜல் அவஸ்தி மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் 2019 ஆம் ஆண்டில் தாக்கல் செய்த முக்கிய வழக்கு, 'பயங்கரவாதச் சட்டம்' என்பதன் வரையறையை விரிவுபடுத்தும் மற்றும் யாரையும் அவ்வாறு முத்திரை குத்துவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் அளித்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டுமா என்பதைத் தீர்மானிக்குமாறு உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது. மேலும் விசாரணை அல்லது ஆதாரம் இல்லாமல் ஒருவரை 'பயங்கரவாதி' என தீர்மானிப்பது அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a)-ன் படி பேச்சு சுதந்திரத்தை மீறுவதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அப்போது தலைமை நீதிபதியாய் இருந்த கோகோய், மத்திய அரசுக்கு பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பிய போதிலும், விசாரணை நடைபெறவில்லை. ரமணா தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில், பல ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் "எதிர்ப்புகளை நசுக்க" அரசின் வெளிப்படையான தன்னிச்சையான சட்டமாகவே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் உள்ளது என வாதிட்டுள்ளனர்.

நவம்பர் 2021 இல், அத்தகைய ஒரு சவால் தலைமை நீதிபதி ரமணா அமர்விற்கு வந்ததைத் தொடர்ந்து அது ஒரு நோட்டீஸை வெளியிட்டது ஆனால் அது வழக்கை விசாரிக்கவில்லை.

டெல்லி உயர் நீதிமன்றம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதச் செயலுக்கான வரையறை "தெளிவற்றது" எனவும்  "எவ்வளவு மோசமான அல்லது கொடூரமான குற்றங்களாக இருந்தாலும் அது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திற்கு கீழ் வராது" என்றும் கூறியது. டெல்லி உயர்நீதிமன்றன் தீர்ப்பு வழங்கிய மூன்று நாட்களுக்குப் பிறகு டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை "முன்னோடியாகக் கருதக் கூடாது" என்று  உச்ச நீதிமன்றம் கூறியது.

பத்திரிக்கையாளரும் மனுதாரருமான ஷியாம் மீரா சிங்,சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திற்கு மீதான சவால்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்காதது "ஆச்சரியமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார். 

"எனினும் இது முற்றிலும் எதிர்பாராதது அல்ல," அனவும் சிங் கூறியுள்ளார் . "வழக்குகளில் எந்த வளர்ச்சியும் இல்லை, மேலும் எனக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட எஃப்ஐஆர் இன்னும் என்னிடம் உள்ளது." என்றும் சிங் கூறியுள்ளார். 

"என்னால் வெளிநாடு செல்ல முடியாது, அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கவும் முடியாது - நான் விரும்புவதும் அவைகள் அல்ல" என்று சிங் கூறியுள்ளார். "எப்போதாவது சிறிய கருணைகள் உள்ளன, ஆனால் ஒட்டுமொத்தமாக, நீதித்துறையில் எனக்கு அதிக நம்பிக்கை இல்லை. முழு நீதித்துறையும் சமரசம் செய்யப்பட்டுள்ளது” எனவும் சிங் தெரிவித்துள்ளார்.

4.  குடியுரிமை திருத்தச் சட்டம்: 987 நாட்களாக நிலுவையில் உள்ளது:

2019 இல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் பாரபட்சமானது என்றும், அது மதம் சார்ந்தது என்றும், 21வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள வாழ்க்கைக்கான அடிப்படைஉரிமையை மீறுவதாகவும் உள்ளது என மனுதாரர்கள் கூறியுள்ளனர். எனவே இது அரசியலமைப்பிற்கு முரணானது என்னும் வாதத்தை முன் வைத்துள்ளனர்.

வழக்கின் பெயர்:  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் Vs யூனியன் ஆஃப் இந்தியா

கடைசியாக நடைபெற்ற விசாரணையின் நீதிபதிகள்:  முன்னாள் தலைமை நீதிபதி போப்டே, நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி சூர்ய காந்த்

முதல் விசாரணை தேதி: 18 டிசம்பர் 2019

கடைசியாக நடைபெற்ற விசாரணையின் தேதி:  22 ஜனவரி 2020(31 மாதங்களுக்கு முன்பு)

மொத்த விசாரணைகள்:  2

பட்டியலிடுவதற்கான கடைசி கோரிக்கை: தெரியவில்லை

பதில்: NA

“படித்த இளைஞர்கள் சமூகத்திலிருந்து விலகி இருக்க முடியாது. உங்களுக்கு ஒரு சிறப்பான பொறுப்பு உள்ளது.  எல்லாவற்றிற்கும் மேலாக, அரசியல் உணர்வுடன் அரசியலமைப்பின் மூலம் தேசத்தை ஒரு புகழ்பெற்ற எதிர்காலத்திற்கு வழிநடத்தும் தலைவர்களாக நீங்கள் வெளிப்பட வேண்டும்.  ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு  இளைஞர்கள் இன்றியமையாதவர்கள். ”

                                 -தலைமை நீதிபதி ரமணா, தேசிய சட்டப் பல்கலைக்கழகம், டெல்லி , 9 டிசம்பர் 2021.

பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் டிசம்பரில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை இயற்றியது.ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்த சட்டம் விரைவான குடியுரிமை வழங்குகிறது. இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்தன. அரசு இதுவரை சரியான விதிகளை வகுக்காததால், சட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை.

அப்போதைய தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச் 18 டிசம்பர் 2019 மற்றும் 22 ஜனவரி 2020 ஆகிய தேதிகளில் இரண்டு விசாரணைகளை நடத்தி சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்தது. கடைசி விசாரணை 22 ஜனவரி 2020 அன்று நடந்தது. அதன் பிறகு எந்த விசாரணையும் இல்லை. 

அசாமில் வரையறுக்கப்பட்ட சட்டத்திற்கு தடை கோரிய மற்றொரு மனு 20 மே 2020 அன்று, தலைமை நீதிபதி பாப்டேயின் அமர்வு மூலம் விசாரணைக்கு வந்தது. ஆனால் அந்த அமர்வு சட்டத்திற்கு தடை விதிக்காமல், மத்திய அரசுக்கு நோட்டீஸ் மட்டும் அனுப்பியது.

“நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்தின் மீதுஅதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளது ஆனாலும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிடவில்லை” என  குடியுரிமை திருத்த சட்டத்தை சவால் செய்த குழுக்களில் ஒன்றான யுனைடெட் அகென்ஸ்ட் ஹேட் குழுமத்தின் நிறுவன உறுப்பினர் பனோஜ்யோத்ஸ்னா லஹிரி, தெரிவித்துள்ளார் . " இதைவிட வேறு எவ்வாறு குடிமக்கள் தெளிவான வார்த்தைகளில் பேச வேண்டும்?" எனவும் உச்சநீதிமன்றத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார் லஹிரி.

"தலைமை நீதிபதி ரமணா தனது முற்போக்கான சிந்தனையை அவருடைய பேச்சுகளில் மட்டுமல்ல, தீர்ப்புகள் மூலமும் காட்டியிருக்க வேண்டும்" என லஹிரி கூறியுள்ளார்.

5.  பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு: 1,323 நாட்களுக்கு நிலுவையில் உள்ளது: 

பட்டியல் இனம், பழங்குடி அல்லது பிற்படுத்தப்பட்ட சாதி நிலைகள் மற்றும் பிற சமூக காரணிகளைக் கருத்தில் கொள்ளாமல், பொருளாதாரத்தின் அடிப்படையில் மட்டுமே அரசு வேலைகள் மற்றும் கல்விக்கான இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று மனுதாரர்கள் வாதத்தை முன்வைத்துள்ளனர்.

வழக்கின்பெயர்: யூத் ஃபார் சமத்துவம் vs யூனியன் ஆஃப் இந்தியா

கடைசி விசாரணையின் நீதிபதிகள்: முன்னாள் தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதி சுபாஷ் ரெட்டி மற்றும் நீதிபதி கவாய்.

முதல் விசாரணை தேதி: 12 மார்ச் 2019.

கடைசியாக நடைபெற்ற விசாரணையின் தேதி: ஆகஸ்ட் 5, 2020 (24 மாதங்களுக்கு முன்பு).

மொத்த விசாரணைகள்: 6

பட்டியலிடுவதற்கான கடைசி கோரிக்கை: தெரியவில்லை.

பதில்: NA

"நான் உறுதியான நடவடிக்கையின் வலுவான ஆதரவாளர். திறமைகளை வளப்படுத்த, சட்டக் கல்வியில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நான் உறுதியாக முன்மொழிகிறேன்.

                                          -தலைமை நீதிபதி ரமணா, புது தில்லி , 10 மார்ச் 2022

பாராளுமன்றம் 103வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை 9 ஜனவரி 2019 அன்று, நிறைவேற்றியது.  இது அரசியலமைப்பின் 15 மற்றும் 16 வது பிரிவுகளில் திருத்தத்தை மேற்கொண்டது. பொருளாதாரம் அல்லது குடும்ப வருமானத்தின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை மற்றும் அரசு வேலைகளில் 10% இடஒதுக்கீடு செய்ய மாநிலத்திற்கு இந்த சட்டதிருத்தம் அதிகாரம் அளித்தது. 

தாழ்த்தப்பட்ட சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சாதியினரைத் தவிர்த்து உச்ச நீதிமன்றம் விதித்த 50% உச்சவரம்பு வரம்பை மீறும் சட்டத்தை எதிர்த்து 20 க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஐந்து நாட்கள் வாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 5, 2020 அன்று, அப்போதைய தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்ற முடிவு செய்தது. அதன் பிறகு வழக்கில் எவ்விதமான முன்னேற்றங்களும் இல்லை.

தலைமை நீதிபதி ரமணா காலத்தில், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

பொது நலனுக்கான பிற வழக்குகளும் ரமணாவால் புறக்கணிக்கப்பட்டுள்ளன:

வழக்கறிஞர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், தலைமை நீதிபதி ரமணா தொடாமல் விட்ட வழக்குகளும் பல உள்ளன.

பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிற குடிமக்கள் மீது உளவு பார்க்க இஸ்ரேலிய ஸ்பைவேரை யூனியன் அரசாங்கம் பயன்படுத்தியது தொடர்பான பெகாசஸ் வழக்கை பல காலமாக விசாரிக்காமல் இருந்த தலைமை நீதிபதி ரமணா நேற்று நடைபெற்ற விசாரணையில் அவரது ஓய்விற்கு பின் தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். 

 ஆகஸ்ட் 2 அன்று, மாநிலக் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ள கர்நாடக உயர் நீதிமன்றத்தின் 15 மார்ச் 2022 தீர்ப்புக்கு எதிராக ரமணா பெஞ்ச் விசாரணைக்கு ஒரு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். நீதிபதிகளில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று ரமணா கூறினார் . தேதி எதுவும் கொடுக்கப்படவில்லை. இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு 159 நாட்கள் ஆகிவிட்டது.

ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் , ஹிஜாப் வழக்கை அவசரமாகப் பட்டியலிட குறைந்தபட்சம் இரண்டு கோரிக்கைகள்  தலைமை நீதிபதி அமர்வு முன் வைக்கப்பட்டன. ஏப்ரல் 26 அன்று, "இரண்டு நாட்கள் காத்திருங்கள்" என்று தலைமை நீதிபதி ரமணா உறுதியளித்தார்.  ஜூலை 13 அன்று, “அடுத்த வாரம் வரை காத்திருங்கள்” என்றார். வழக்கு இன்னும் பட்டியலிடப்படவில்லை.

"சாதாரண நடைமுறையில், சிறப்பு மனுக்கள் கொடுக்கப்பட்ட நாளிலிருந்து 5-6 நாட்களுக்குள் விசாரணைக்கு பட்டியலிடப்படும்" என்றும் "எங்கள் விஷயத்தில், இது மாதங்கள் ஆகிவிட்டது. இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தயக்கம் காட்டுவதையே இது காட்டுகிறது” என்றும் ஃபௌசியா ஷகில் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com