இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு...மீண்டும் வெடித்த மக்கள் போராட்டம்!

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு...மீண்டும் வெடித்த மக்கள் போராட்டம்!

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அதிபரும் பிரதமரும் ராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் யாரை ராஜினாமா செய்யக்கோரி போராட்டம் நடத்துனார்களோ தற்போது  அவர்களில் ஒருவரான ரணில் விக்ரமசிங்கே  மீண்டும்  அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனால்  மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டம் வெடித்தது.

இலங்கையில் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்ட ரணில்:

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில்  அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை கையில் எடுத்தனர். ஒருகட்டத்தில் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, வெளிநாடு தப்பிய கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரசிங்கே இடைக்கால அதிபராக நியமனம் செய்யப்பட்டார். 

இன்று அதிபர் தேர்தல்: 

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில், தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அனுராகுமார திசநாயக, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்த டலஸ் அழகப்பெரும எம்.பி. ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 223 எம்.பிக்கள் தங்களது வாக்குகளை செலுத்திய நிலையில் 219 வாக்குகள் மட்டுமே செல்லுபடியனதாக தெரிவிக்கப்பட்டது. 

அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே:

அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்ததை அடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் ரணில் விக்ரமசிங்கே 134 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டலஸ் அழகப்பெரும 84 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.  இதையடுத்து பெரும்பான்மையை பெற்ற ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் புதிய அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வருகிற 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அப்பொறுப்பில் நீடிப்பார் என கூறப்படுகிறது.

அதிபர் ஆன ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிர்ப்பு:

இலங்கையில் மக்கள் போராட்டத்தை கையில் எடுத்ததே இலங்கை அதிபரும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்பதற்காக தான். அவர்களின் கோரிக்கைபடி முதலில் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அடுத்ததாக பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். ஆனால் அதன்பிறகும் இலங்கையில் நிலைமை மாறாததால், மீண்டும் மக்கள் போராட்டத்தை கையில் எடுத்தனர். அதிபரும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து மிக பெரிய திரளான போராட்டம் வெடித்தது. போராட்டத்தை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் பிரதமர் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டார்.  தொடர்ந்து அதிபரும் ஆனார். மக்கள் யாரை பதவி விலக கோரி போராட்டத்தை கையில் எடுத்தார்களோ, அவரே மீண்டும் அதிபர் ஆனதால் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.