சிவகங்கை: 30 வருடங்களாக நிற்காமல் செல்லும் ரயில்கள்... கண்டுகொள்ளப்படாத மக்களின் கோரிக்கை!!

ரயில்கள் நின்று செல்லக்கோரி கடைகளை அடைத்து முழு பந்த், மற்றும் ரயில் மறியல் போராட்டம்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ரயில் நிலையத்தை கடந்து செல்லும் அனைத்து ரயில்களும் ரயில் நிலையத்தில் நின்று செல்ல கோரி 30 ஆண்டுகளாக கோரிக்கைவிடுத்தும் கண்டுகொள்ளாத தெற்கு ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து நகர் பொது மக்கள், வர்த்தகர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் இன்று கடைகளை அடைத்து பந்த் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்டமாக அனைத்து கடைகளையும் அடைத்து முழு ஆதரவை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தின் தலைநகராக சிவகங்கை உருவாகி 38 ஆண்டுகளை கடந்த நிலையில் நகரின் வளர்ச்சி என்பது இன்றளவும் கேள்விக்குரியாகவே உள்ளது. மேலும் சிவகங்கை வழியாக ஏராளமான பயனிகள் ரயில் கடந்து செல்லும் நிலையில் ஒரு சில ரயில் தவிர மற்ற ரயில்கள் நின்று செல்வதில்லை. மேலும் தெற்கு ரயில்வே சார்பில் அன்மையில் இயக்கப்பட்டுவரும் பல்லவன் ரயிலும் காரைக்குடி வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக சிவகங்கையை கடந்து செல்லும் அனைத்து ரயிகளையும் நிறுத்த கோரி பொது மக்கள் மற்றும் வர்த்தகர்கள் சார்பில் பலமுறை கோரிக்கைவிடுத்தும் இதுவரை தெற்கு ரயில்வே கண்டு கொள்ளவில்லை.  

இந்நிலையில் சிவகங்கை நகர் பொது மக்கள் மற்றும் வர்த்தகர்கள் சார்பில் சிவகங்கை நலக்குழு என்கிற குழுவை உருவாக்கி அதன் கீழ் அனைவரும் ஒன்றுபட செய்து அதன் ஒருங்கினைப்பாளராக சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் நியமிக்கப்பட்டு அவரின் தலைமையில் இன்று கடைகளை அடைத்து முழு பந்த் மற்றும் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. 

அரசின் தரப்பில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் உடன்பாடு எட்டப்படாததால் இன்று அறிவிக்கப்பட்டதுபோல் அனைத்து போராட்டமும் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக சிவகங்கை நகர் முழுவதுமுள்ள அனைத்து கடைகளையும் அடைத்து வர்த்தகர்கள் தங்களது முழு ஆதரவையும் வழங்கியுள்ளனர். இதன் காரணமாக நகரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.  இதனை தொடர்ந்து சிவகங்கை ரயில் நிலையத்தில் பொது மக்கள், அனைத்து கட்சியினர், வர்த்தகர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.