போலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி பணம் பறித்த நகைகடை

போலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி பணம் பறித்த நகைகடை

போலி தங்க நகைகளைக் கொடுத்து வாடிக்கையாளரை இரண்டு முறை ஏமாற்றிய பிரபல தி.நகர் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை நிர்வாகத்தின் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐயப்பன் தாங்கல், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் திரிவேணி(37). மருத்துவரான இவர்,  சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி மாம்பலம் காவல் நிலையம் மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தபால் மூலம் புகார் ஒன்றை அளித்திருந்தார். 

அந்த புகாரில், "தான் 2015-ம் ஆண்டு தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகையில் 24 கிராம் தங்க வளையல் வாங்கியதாகவும், அதேபோல 2016-ம் ஆண்டு 23.630 கிராம் தங்க செயின் வாங்கியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு வாங்கிய தங்கச் செயினானது கடந்த 2019ஆம் ஆண்டு அறுந்து விழுந்ததாகவும் அறுந்து விழுந்த செயினை எடுத்து பார்த்தபோது அதனுள் வெள்ளி கம்பிகள் இருந்ததாகவும்" தெரிவித்துள்ளார்.  

மேலும், "இது குறித்து சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மேலாளரிடம் சென்று முறையிட்டபோது, நகை செய்யும் போது இது தெரியாமல் நடந்திருக்கலாம் எனவும் அதற்காக அவர் மன்னிப்புக் கேட்டு வேறு நகைகளை மாற்றி கொடுத்ததாகவும்" புகாரில் தெரிவித்த மருத்துவர் திரிவேணி, அதனால் காவல்நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்காமல் நகையை மாற்றிக் கொண்டு வந்து விட்டதாக தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு வாங்கிய வளையல் சமீபத்தில் உடைந்து போனதாகவும் அப்போது அதை சோதனை செய்து பார்த்தபோது வளையல் கற்களுக்கு கீழே அதிக அளவில் அரக்கு வைக்கப்பட்டு தங்களை ஏமாற்றியதாகவும், தாங்கள் வாங்கிய இரண்டு நகைகளிலும் தங்களை ஏமாற்றியது போல், பல வாடிக்கையாளர்களை இதேபோல் போலியாக தங்கநகை கொடுத்து ஏமாற்றி இருக்கலாம்? எனவும் இதனால் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கடந்த ஜூன் 22ஆம் தேதி மாம்பலம் காவல் நிலையம் மற்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் தபால் மூலம் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து காவல்துறை சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகையின் மீது சரியான முறையில் நடவடிக்கை எடுக்காததால் மருத்துவர் திரிவேணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். 

மருத்துவர் திரிவேணியிடம் இரண்டு முறை போலியான தங்க நகைகளை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என நீதிமன்றம் மாம்பலம் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. 

நீதிமன்ற உத்தரவின்படி வழக்கை விசாரித்த போது சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மருத்துவர் திரிவேணியை இரண்டு முறை போலியான தங்க நகைகளை கொடுத்து ஏமாற்றியது தெரிய வந்தது. 

இதனடிப்படையில் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை நிர்வாகத்தின் மீது மோசடி செய்தல் மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல நகை கடையான தி.நகர் சரவணா ஸ்டோரில் வாடிக்கையாளர் ஒருவர் இரண்டு முறை தங்க நகைகள் வாங்கியதும், 2 முறை வாங்கிய தங்க நகைகளிலும் வெள்ளிக் கம்பிகள் மற்றும் அரக்குகள் வைத்து வாடிக்கையாளரை சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை ஏமாற்றியதால் அதன்மீது வழக்கு பதியப்பட்டு இருப்பதும் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை வாடிக்கையாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.