சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர்.. இந்தியாவின் சிறந்த முதல்வராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி என்ன?
முதல்வராக பொறுப்பேற்று இரண்டே மாதத்தில் இந்தியாவின் சிறந்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் . ஓர்மாக்ஸ்' என்ற தனியார் நிறுவனம் இந்திய மாநிலங்களில் உள்ள முதல்வரின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அவர்களில் யார் சிறந்த மாநில முதல்வர்? என்று ஒவ்வொரு மாதமும் பட்டியலிட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 'ஓர்மாக்ஸ்' நிறுவனம் ஆய்வு நடத்திய ஆய்வுகளின் முடிவில் இந்தியாவின் தலைசிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆனால், இதெல்லாம் இப்போது. மே 7ம் தேதி ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்தது. அப்போது, இவரெல்லாம் என்ன முதல்வர், இவர் வந்த நேரம் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி விட்டது. பேசாமல் ஆட்சியை எடப்பாடியிடம் கொடுக்க சொல்லுங்கள். கொரோனாவை அதிமுக அரசு சிறப்பாக கையாண்டது. கொரோனா முதல் அலையை சிறப்பாக கட்டுப்படுத்தினார்கள்.
மா.சுப்பிரமணியன் என்ன செய்கிறார்? இவர் எல்லாம் அமைச்சரா? பேசாமல் விஜயபாஸ்கரையே கூப்பிடுங்கள்... அவர் இருந்திருந்தால் கொரோனா இப்படி பெருகியிருக்காது.! அவர்கள் இருக்கும் போது கொரோனா மூன்றாயிரத்தை தாண்டவில்லை, இவர்கள் வந்ததும் 30 ஆயிரத்தை தாண்டி விட்டது. "மிஸ் யூ விஜயபாஸ்கர்" என்று திரும்பிய திசை எல்லாம் ஸ்டாலினுக்கு விமர்சனம் விமர்சனம் விமர்சனம் மட்டும் தான். இத்தனைக்கும் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்று 15 நாள் கூட தாண்டியிருக்கவில்லை.
ஆனால், இது எல்லாம் கடந்த கால வரலாறு.. தன் மீது வைக்கப்பட்ட இத்தனை விமர்சனங்களையும் சவால்களாக எடுத்துக்கொண்டு கொரோனாவுக்கு எதிராக போராடியது ஸ்டாலின் அரசு. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற ஒரே வாரத்தில் தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை மூன்று மடங்காக அதிகரித்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணங்கள் ஏற்பட்டதாக அங்கங்கு செய்தி வந்தது. உடனே ஒன்றிய அரசிடன் தமிழகத்துக்கு ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவேண்டுமாறு கோரிக்கை விடுத்தார். வெறும் கோரிக்கையோடு நிற்காமல் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, சிங்கப்பூர், நெதர்லாந்து போன்ற நாடுகளிடமிருந்து அவசர கதியில் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்தார். மேலும் விமர்சனம் வரும் என்று அறிந்தே ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையை தொடங்கவும் நடவடிக்கை எடுத்தார்.
அதன்பின் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் ஆம்புலன்சுகள் மருத்துவமனை முன் வரிசையாக நின்றது. உடனே கொரோனா சிகிச்சை மையங்களை பல மடங்காக அதிகரித்தார். அதோடு நிற்காமல் மாவட்டத்துக்கு ஒரு அமைச்சரை பொறுப்பாக நியமித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொரோனா பணிகளை முடுக்கிவிட்டார் மு.க.ஸ்டாலின்.
மேலும், கடந்த முறை நடைமுறைப்படுத்த பட்ட ஊரடங்கில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு ஊரடங்கில் பல தளர்வுகளையும் அளித்தார். இது அவசர தேவைக்காக வெளியே செல்லும் பொதுமக்களை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. அதோடு, கொரோனா ஊரடங்கில் குடும்பத்துக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கி பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமலும் பார்த்துக்கொண்டார்.
ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகள் வைத்த இந்த விமர்சனங்களை மெளனமாக கடந்த சென்ற திமுக, கொரோனா பாதிப்பு குறையத்தொடங்கியதும் தன் முன் இருந்த கொரோனா கால சவால்களை பட்டியலிட்டது.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திமுக ஆட்சி பொறுப்பேற்கும் போதே கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை கடந்து விட்டது என்றும், ஆனால் அதுவரை ஆட்சியிலிருந்த அதிமுக அரசு ஆக்சிஜன் தேவையை உயர்த்தவில்லை என்று கூறினார். மேலும் திமுக ஆட்சிக்கு வரும் போது, தமிழகத்தின் ஆக்சிஜன் கையிருப்பு மிகவும் குறைவாக இருந்தது. தினசரி ஆக்சிஜன் தேவை தினமும் 400- 450 மெட்ரிக் டன் என்ற அளவில் இருந்தது. அப்போது மத்தியத் தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீடு என்பது 220 மெட்ரிக் டன்னாக இருந்தது. அதன்பின் முதல்வரின் கோரிக்கைக்கு பின் அது 519 மெட்ரிக் டன்னாக அதிகரித்தாலும், அந்த சூழ்நிலையில் தமிழக தேவை தமிழகத்தின் தேவை 650 மெட்ரிக் டன்னாக உயர்ந்தது.
எனவே வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் வாங்க முதல்வர் உத்தரவிட்டார். முதல்வரின் இந்த முயற்சியால் தான் ஆக்சிஜன் பற்றாக்குறையையும், கொரோனாவையும் சமாளிக்க முடிந்தது என்று கூறினார். அப்போது தான் பலருக்கு புரிந்தது, திமுக அரசுக்கு இருந்த சவால்கள் என்ன என்றும், அதை எப்படி திறம்பட சமாளித்தார்கள் என்பதும்.
தமிழக அரசின் இந்த சாதனைகள் வெளிவரத் தொடங்கியதும் பல்வேறு தரப்பில் இருந்து அரசின் இந்த செயல்பாடுகள் பாராட்டப்பட்டன. ஆரம்பத்தில் கொரோனா விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்தவர்கள் கூட அதன் பின் அவரை பாராட்டினர்.
மேலும் கொரோனா நிவாரண நிதியில் தமிழக அரசின் வெளிப்படை தன்மை, ஜி.எஸ்.டி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு, ரேஷன் கடை மூலம் குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண தொகை கொடுத்தது என தமிழக அரசின் அத்தனை செயல்பாடும் இந்திய அளவில் கவனிக்கப்பட்டன. இதன் விளைவாக தான் என்னவோ பல ஆண்டுகள் மாநிலங்களை ஆண்ட முதல்வர்களை பின்னுக்கு தள்ளி சிறந்த முதல்வர் என்ற சாதனையை மு.க.ஸ்டாலின் பிடித்துள்ளார். வாழ்த்துக்களை முதல்வர் அவர்களே...