ராகுல்காந்தியின் தண்டனை நிறுத்தி வைப்பு... வழக்கு கடந்து வந்த பாதை!!

ராகுல்காந்தியின் தண்டனை நிறுத்தி வைப்பு... வழக்கு கடந்து வந்த பாதை!!

ராகுல்காந்தியின் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்ப பெயரையே வைத்திருக்கிறார்கள்” என்று சர்ச்சைக்குரிய வகையில் ராகுல்காந்தி பேசியிருந்தார். இதனையடுத்து, மோடி சமூகத்தினரை இழிவுப்படுத்தும் விதமாக பேசியதாக கூறி ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அதன்பிறகு அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது வரும் 2024 மக்களவை தேர்தலையொட்டி, 3 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த ராகுல்காந்திக்கு எதிரான இந்த வழக்கை திடீரென கடந்த மார்ச் மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுடன் ஜாமீனும் வழங்கி, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் வகையில் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து  சூரத் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு காங்கிரஸ் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத பாஜக அரசின் சூழ்ச்சியே இந்த 2 ஆண்டு சிறைத்தண்டனை என்று காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்பட்டது. தொடர்ந்து, சிறைத் தண்டனைக்குள்ளானதால் ராகுல் காந்தி தன்னுடைய எம்.பி பதவியையும் இழக்க நேர்ந்தது.

இதையும் படிக்க || ராகுல்காந்தி வழக்கு :தொடக்கம் முதல் உச்சநீதிமன்றம் வரை!

பின்னர்,  2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்தது. இதனைத்தொடர்ந்து, மேல்முறையீட்டு மனுவில் சூரத் அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குஜராத் (சூரத்) உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார்.அங்கும் அதே போல், சூரத் அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.

எனினும் விடாத ராகுல்காந்தி, 2 ஆண்டுகள் சிறைதண்டனையை உறுதி செய்த குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், மோடி சமூகம் என்பது இந்திய தண்டனை சட்டத்திற்குள் வரும் வரையறுக்கப்பட்ட சமூகம் இல்லை, தான் கூறியது புகார் தாரரை குறிப்பிடவில்லை, தன்னுடைய கருத்தால் புகார்தாரர் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடவில்லை உள்ளிட்ட 10 காரணங்களை குறிப்பிட்டு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க || உச்சநீதிமன்றம் சென்ற ராகுல்காந்தி...மனுவில் சொன்ன 10 காரணங்கள் என்னென்ன?

இந்நிலையில், ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், பொதுவாழ்வில் இருப்போர் பொதுக்கூட்டங்களில் கவனமாகப் பேச வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும், ஒரு ஆண்டு 11 மாதங்கள் கூட தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம் என்ற பட்சத்தில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் வழங்கப்படுவதற்கான காரணங்கள் என்ன எனவும்  நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

மேலும், வாதங்கள்தான் பக்கம் பக்கமாக உள்ளதே தவிர அதிகபட்ச தண்டனைக்கான உரிய காரணம் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், கீழமை நீதிமன்ற உத்தரவால் எம்.பி என்ற உரிமை மட்டுமல்லாமல், அவரைத் தேர்ந்தெடுத்த தொகுதி வாக்காளர்களின் உரிமையும் கேள்விக்குறி ஆக்கியுள்ளதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கீழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவின் மூலம் ராகுல் காந்தியின் எம்பி பதவி தப்பியதாக கருதப்படுகிறது. இந்நிலையில், 7ம் தேதி மீண்டும் கூடவுள்ள மக்களவையில், ராகுல்காந்தி பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.