நிறுத்தி வைக்கப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா...! அடுத்தது என்ன...?

நிறுத்தி வைக்கப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா...!  அடுத்தது என்ன...?

சட்டப்பேரவையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில்  தொழிலாளர்களின் பணி நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனால் கொண்டு வரப்பட்டது. அப்போது திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, மனித நேய மக்கள் கட்சி போன்றவை இச்சட்ட மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. 

தொடர்ந்து, இந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என அனைத்து தொழிற்சங்கங்களும் கோரிக்கை வைத்து ஆர்பாட்டங்களை அறிவித்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த திமுக அரசு அழைப்பு விடுத்திருந்தது.  இதனை ஏற்று நேற்று மாலை அரசின் சார்பில் மூன்று அமைச்சர்கள் கொண்ட குழுவுடன் பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

இதில் கலந்து கொண்ட தொழிற்சங்கங்கள் அனைத்தும் 12 மணி நேர வேலை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் திமுகவின் சொந்த தொழிற்சங்கமான தொமுசவே இச்சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் இச்சட்ட மசோதாவின் தற்போதய நிலை என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.  

எந்த ஒரு சட்டமும் முதலில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு வைக்கப்படும்.  இதில் விவாதம் முடிந்த பின்னர் அம்மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். வாக்கெடுப்பின் போது பெரும்பான்மையான  உறுப்பினர்கள் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தால் அம்மசோதா சட்டப் பேரவையில் நிறைவேறியதாக அறிவிக்கப்படும். ஒருவேளை பெரும்பான்மை பலத்தை பெறவில்லை எனில் அம்மசோதா தோல்வி அடைந்ததாக கருதப்படும். சட்டப்பேரவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட மசோதாகளை ஆளுநருக்கு அனுப்பி அவரின் ஒப்புதல் பெற்றதும் அது சட்டமாக மாறி நடைமுறைக்கு வரும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாகளை ஆளுநருக்கு அனுப்பும் முன்னதாக சட்ட மசோதாக்களை திரும்ப பெறவும் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.  

சட்டப்பேரவையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர்களின் பணி நேரத்தினை 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா உள்ளிட்ட 17 மசோதாக்கள் சட்டப்பேரவை செயலகத்திலிருந்து சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்டத்துறையினர் அவற்றை சரிபார்த்தப் பின்னரே இதனை ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்புவர். ஆனால் தற்போது தொழிலாளர்களின் பணி நேரம் 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதாவை இந்த கட்டத்திலேயே நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் இது நிறுத்தி வைக்கப்பட்டதற்கான தகவல் முறைப்படி சட்டப் பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த சட்ட மசோதாவை எப்போது வேண்டுமானாலும் உடனடியாக ஆளுநருக்கு அனுப்பி ஒப்புதல் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.