”இந்து” என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? காங்கிரஸ் மூத்த தலைவரின் சர்ச்சையான பேச்சு!

”இந்து” என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? காங்கிரஸ் மூத்த தலைவரின் சர்ச்சையான பேச்சு!

இந்து என்ற வர்த்தைக்கு மிக மோசமான அர்த்தம் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சதீஷ் ஜர்கிஹோலி பேசியிருப்பது அரசியல் அரங்கில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

“இந்து” என்கிற வார்த்தை எங்கிருந்து வந்தது தெரியுமா?:

கர்நாடக மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான சதிஷ் ஜர்கிஹோலி,  பெலகாவி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், இந்து மதம் நம் மக்கள் மீது கட்டாயப்படுத்தி திணிக்கப்பட்டுள்ளதாக கூறினார். “இந்து” என்கிற வார்த்தை எங்கிருந்து வந்தது தெரியுமா? என்று கேள்வி எழுப்பிய அவர், பெர்சியாவில் இருந்து தான் வந்தது என்று கூறினார்.

இந்து என்றால் மோசமான அர்த்தம்:

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிற்கும், பெர்சியாவிற்கும் என்ன தொடர்பு? இந்து எப்படி நம் மதம் ஆகும்? வாட்ஸ்-அப், விக்கிபீடியா ஆகியவற்றில் தேடிப் பாருங்கள். இந்த வார்த்தை நம்முடையது அல்ல. இதற்கு மோசமான அர்த்தம் இருக்கிறது. தெரிந்தால் வருத்தப்படுவீர்கள். அப்படியிருக்கையில் அதை ஏன் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பி நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: 10% இட ஒதுக்கீடுக்கான தீர்ப்பு...ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

சர்ச்சையை ஏற்படுத்திய சதிஷின் பேச்சு:

இந்தியாவை பொறுத்தவரை இந்துக்கள் தான் பெரும்பான்மை சமூகமாக வசித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், “இந்து” குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சதிஷ் ஜர்கிஹோலியின் பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவர் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் எதிர்ப்புகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.  

கண்டனம் தெரிவித்த பாஜக:

இந்நிலையில்  இந்த சர்ச்சை பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பாஜகவை சேர்ந்த எஸ்.பிரகாஷ்,  காங்கிரஸ் மூத்த தலைவர் சதிஷ் ஜர்கிஹோலியின் பேச்சை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று கண்டனம் தெரிவித்தார். முன்னதாக, காங்கிரஸை சேர்ந்த சித்தராமையா தான் இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். அதேபோல் தற்போது அவருடைய சிஷ்யரான சதிஷ் ஜர்கிஹோலியும் தொடங்கியுள்ளார். இதற்கு காங்கிரஸ் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  

நிச்சயம் காங்கிரஸ் கண்டிக்கிறது:

இதைத்தொடர்ந்து,  காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், இந்து என்பது வாழ்க்கை முறை மற்றும் நாகரீக வாழ்வின் யதார்த்தம் . ஒவ்வொரு மதத்திற்கும், நம்பிக்கையும் மரியாதையும் அளிக்கும் வகையில் தான் காங்கிரஸ் இந்த நாட்டை கட்டியெழுப்பியது. ஆனால், தற்போது காங்கிரஸை சேர்ந்த சதிஷ் ஜர்கிஹோலி இப்படி பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்:

இந்நிலையில், இந்து குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த சதிஷ் ஜர்கிஹோலிக்கு எதிராக, தபஸ்வி சவ்னி அயோத்தியை சேர்ந்த ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா அவர்கள்,  சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த பின்னணியில், கடந்த 2002 ஆம் ஆண்டு ”இந்து என்றால் திருடன்” என்று விஷ்வகோஷ் என்ற இந்தி அகராதியில் இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி பேசியிருந்தார்,  இதன்மூலம் தமிழகத்திலும் இந்த பிரச்சனை நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.