
ஐபிஎல் 14வது சீசன் ஐபிஎல் இறுதி போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. சென்னை அணிக்கு கடந்த ஆண்டு தொடர் படுமோசமாக அமைந்தது, எல்லா சீசனிலும் ப்ளே ஆஃப்ஸுக்கு தகுதிப்பெற்றிருந்த அந்த அணி கடந்த சீசனில் முதல் முறையாக ப்ளே ஆஃப்ஸுக்கு தகுதிப்பெறாமல் வெளியேறியது. அந்த தொடரில் பேசிய தல தோனி அடுத்த ஆண்டு இன்னும் கூடுதல் பலத்துடன் திரும்புவோம் என கூறினார். அவர் சொன்னது போல தான் இந்த ஆண்டு ப்ளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று இறுதி போட்டிக்கு அசத்தியுள்ளது. மேலும் ஐபிஎல் வரலாற்றிலே முதன் முறையாக 9வது வாட்டி இறுதி போட்டிக்கு முன்னேறிய அணி என்ற மகத்தான சாதனையை படைத்தது சென்னை அணியின் தோனி படை.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை பொறுத்த வரை சென்னை அணியில் டாப் 3 பேட்ஸ்மேன்கள்தான் மிகப்பெரிய பலமாக உள்ளது. டூ ப்ளெஸ்சிஸ் மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் இருவரும் ஓப்பனிங்கில் கலக்கி வருகின்றனர். ஒன் டவுனில் ராபின் உத்தப்பாவும் நல்ல ஃபார்மிற்கு திரும்பியுள்ளார். இந்த மூன்று பேரும் தான் பேட்டிங் பொறுப்பை ஏற்று சிறப்பாக ஆடிக்கொடுக்க வேண்டும் மேலும் இறுதி போட்டியில் சின்ன தல சுரேஷ் ரெய்னா களமிறக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இன்னிங்ஸை ஃபினிஷ் செய்து கொடுப்பதற்கு ஜடேஜா மாதிரியான தீர்க்கமான வீரர் இருப்பதும் தோனியுமே இப்போது கொஞ்சம் ஃபார்முக்கு திரும்பியிருப்பது சென்னை அணிக்கு சாதகமாக உள்ளது.
பந்துவீச்சை பொருத்த வரை சென்னை அணியின் தீபக் சஹார், ஹேசல்வுட் பவர்ப்ளேயில் சிறப்பாக வீசி வருகின்றனர். நல்ல ஃபார்மில் இருக்கும் ஷர்துல் தாகூர் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்துவிடுவார். டெத் ஓவர்களில் ப்ராவோ சிறப்பாக வீசியாக வேண்டும். குறிப்பாக, சென்னை ஸ்கோரை டிஃபண்ட் செய்யும் பட்சத்தில் ப்ராவோ மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கொல்கத்தா அணியை பொறுத்தவரைக்கும் 2012, 2014 சீசன்களில் கோப்பையை வென்றது. ஆனால், அதன்பிறகு பெரிய வெற்றிகளை அவர்களால் குவிக்க முடியவில்லை. இந்த சீசனிலும் முதல் பாதியில் ரொம்பவே சுமாராகவே ஆடியிருந்தனர். 7 போட்டிகளில் 2 இல் மட்டுமே வென்றிருந்தனர். ஆனால், இரண்டாம் பாதியில் விஸ்வரூபமெடுத்தனர். 7 போட்டிகளில் 5 இல் வென்று ப்ளே ஆஃப்ஸுக்கு முன்னேறினர். ப்ளே ஆஃப்ஸில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி அதிரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்வதில் உறுதியாக இருக்கிறது. மேலும், இதற்கு முன்னர் 2012 இல் சென்னையும் கொல்கத்தாவும் இறுதிப்போட்டியில் மோதிய போது கொல்கத்தாவே கோப்பையை வென்றிருக்கிறது. அந்த வரலாறும் அவர்களுக்கு தெம்பை கொடுத்திருக்கிறது.
கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில், ராகுல் திரிபாதி என டாப் 3 பேட்ஸ்மேன்கள் மூவரும் பட்டையை கிளப்புகின்றனர். இரண்டு அணிகளின் மிடில் ஆர்டருமே நிலையில்லா தன்மையுடனே இருக்கிறது. பௌலிங்கில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஷகிப்-அல்-ஹசன் என மூன்று முக்கிய ஸ்பின்னர்களை கொல்கத்தா வைத்திருக்கிறது. இந்த தொடர் முழுவதும் சரியாக விளையாட அந்த அணி கேப்டன் மோர்கன் தனது கேப்டன்ஷிப்பில் முழு பங்களிப்பை வழங்கி இறுதி போட்டி வரை கொண்டு சென்றுள்ளார். மூன்று பேருமே மேட்ச் வின்னர்கள். ஃபெர்ச்குசன், சிவம் மவி இருவரும் வேகத்தில் மிரட்டுவார்கள். இவர்களை சமாளிப்பது சென்னை அணிக்கு கொஞ்சம் கடினமான விஷயமாக இருக்கலாம்.
ஆனால், ருத்துராஜ், ராபின் உத்தப்பா போன்ற வீரர்கள் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்வார்கள் என்பது சாதகமான விஷயமாக இருக்கிறது. மேலும் பிரவோ,ராயுடு உள்ளிட்ட வீரர்களுக்கு சென்னை அணியில் விளையாடும் இது கடைசி போட்டியாக கூட இருக்கலாம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணி ரசிகர்களுக்கு இது மறக்க முடியாத போட்டியாக கூட இருக்கலாம். அடுத்தாண்டு மேலும் இரண்டு அணிகள் புதிதாக வரவுள்ளதால் ரீடேயின் செய்யும் முறையில் ஐபிஎல் நிர்வாகம் என்ன முடிவு எடுக்கபோகிறது என்பது தெரியவில்லை. இதனால் சென்னை அணி கேப்டன் தோனி மற்றும் சின்ன தல ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் அடுத்தாண்டு மஞ்சள் நிற உடையில் பார்போமா என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.