சசிகலா மீது குற்றச்சாட்டு...நடந்தது என்ன?

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்டதால் ம.நடராசன் பெயர் இந்திய இராணுவத்தின் ஹிட் லிஸ்டில்(கொல்லப்பட வேண்டியவர்கள் பட்டியல்) இருந்ததாகவும் கூறுவர்.

சசிகலா மீது குற்றச்சாட்டு...நடந்தது என்ன?

தமிழ்நாடு அரசின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அடுத்தடுத்து அதிமுகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அவர் மறைவுக்கு பின் சசிகலா அக்கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

சசிகலா மற்றும் நடராசன்

தமிழ்நாட்டு அரசியலில் 1991க்குப் பிறகு ஜெயலலிதா என்னும் பெயர் ஒலிக்கும் போதெல்லாம் தவறாமல் சசிகலா என்ற பெயரும் அனைவரின் நினைவுக்கும் வரும். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தோழியாகவும் ஏன் சகோதரியாகவும் இருந்தவர் சசிகலா. எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு அதிமுக இரண்டாக பிளவுற்றது. ஜெயலலிதாவிற்கு பின்புலமாக இருந்து அவருக்கு அனைத்து உதவிகளும் செய்தது சசிகலாவின் கணவர் ம.நடராசன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆவர். ம.நடராசன் தனது மாணவப் பருவத்திலிருந்தே அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர் போராட்டக் குழுவில் முதன்மையானவராக செயல்பட்டார். 

மேலும் படிக்க : நெருப்பாற்றில் நீந்திக்கொண்டிருக்கும் சசிகலா...திவாகரன் பேச்சு!

இராணுவத்தின் பட்டியலில் ம.நடராசன்

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்டதால் ம.நடராசன் பெயர் இந்திய இராணுவத்தின் ஹிட் லிஸ்டில்(கொல்லப்பட வேண்டியவர்கள் பட்டியல்) இருந்ததாகவும் கூறுவர். இந்தி திணிப்புக்கு எதிரானப் போராட்டம் தான் 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்பதற்கு முதன்மைக் காரணம். இவர் பின்பு தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றினார். ம.நடராசன் - சசிகலா இணையரின் திருமணம் நடந்ததே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தான். சசிகலாவோ ம.நடராசனோ ஜெயலலிதாவின் வழியாக அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல, அதற்கு முன்பிருந்தே அவர்கள் அரசியல் தொடர்போடு தான் இருந்துள்ளனர்.  

மேலும் படிக்க : தமிழகத்தைச் சேர்ந்தவர்களை புறக்கணிக்கக் கூடாது...சசிகலா அறிக்கை! 

சசிகலாவை எதிர்க்கும் பாஜக

ஜெயலலிதா தனக்கு நம்பிக்கைக்குரியவராக கருதியது சசிகலாவை தான். ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக பார்க்கப்பட்டதும் சசிகலா தான். ஆனால் சசிகலா அதிமுக பொதுச்செயலாளரானதற்கு எதிராகவும், அவர் முதலமைச்சராகும் தருவாயில் அதனைத் தடுத்தது பாஜக தான் என்ற குற்றச்சாட்டும் உண்டு. ஓ.பன்னீர்செல்வத்தை தூண்டி சசிகலாவிற்கு எதிராக செயல்பட வைத்தது, சொத்துக்குவிப்பு வழக்கில் திடீரென தீர்ப்பு வழங்கப்பட்டது உள்ளிட்ட விடயங்களை இணைத்துப் பார்த்தால் பாஜக சசிகலா ஒரு அரசியல் சக்தியாக நிலைபெறுவதைத் தடுத்தது என்ற முடிவுக்கு வரலாம்.

அதிமுகவினருக்குத் தெரியும் ஜெயலலிதா அக்கட்சியின் வெளிப்படையான முகம் என்றால், சசிகலா அக்கட்சியின் நிழல் முகம். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை தமதாக்க முயன்ற பாஜகவிற்கு சசிகலாவின் நேரடி அரசியல் பங்கேற்பு என்பது பெரும் தடையாக இருக்கும் என கருதியது.

அதனால் முதலில் ஓ.பன்னீர்செல்வத்தை வைத்து சசிகலாவிற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்ட பாஜக பின் சசிகலாவால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை வைத்தே சசிகலா மற்றும் தினகரனை அதிமுகவிலிருந்து நீக்கினர். இன்றும் கூட வலு குறைந்த சக்தியாக சசிகலாவை அதிமுகவில் வைத்திருக்க பாஜக விரும்பக்கூடும். ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலாவிற்கு எதிரான பாஜகவின் நடவடிக்கைகள் அனைத்தும் அவர் தனித்த பலம் பொருந்திய சக்தியாக உருவெடுப்பதைத் தடுக்கத் தான்.

- ஜெ