இலங்கை உள்நாட்டுப் போரை நோக்கித் தள்ளப்படும்...முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை!

இலங்கை உள்நாட்டுப் போரை நோக்கித் தள்ளப்படும்...முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை!

அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் செயற்பாடுகள் காரணமாக இலங்கை உள்நாட்டுப் போரை நோக்கித் தள்ளப்படும் ஆபத்து இருப்பதாக முன்னிலை சோசலிசக்கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

ஜூலை 15 ஆம் தேதி தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்க, கொழும்பு வாலுக்காரம விகாரையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.குறைந்தது இரண்டு நாட்களுக்காகவது அதிபர் பதவிக்கு வர வேண்டும் என்ற சிறுப்பிள்ளை தனமான எதிர்ப்பார்ப்புடன் அவர் அதிபர் பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டார்.

கோத்தபய ராஜபக்சே பதவி விலகி ரணிலை அந்த இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரவில்லை.1988,1989 ஆம் ஆண்டுகளில் பட்டலந்தை சித்திரவதை முகாமில் கொலை செய்த காலம் என நினைத்துக்கொண்டிருக்கின்றார். இல்லை, இது 2022 ஆம் ஆண்டில் இருக்கும் இலங்கை.இந்த காலத்தில் விளையாட முடியாது.அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட வேண்டும் என்ற விடயத்தை ரணில் விக்ரமசிங்கே முற்றிலும் மீறியுள்ளார்.அவரை அதிபராக எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வரும் ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை அதிபரை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

தமது பாதுகாப்புக்காக ரணிலை வைத்துக்கொள்ள வேண்டும் என்று பொதுஜன பெரமுன நினைத்துக்கொண்டிருக்கின்றது.மக்களின் கட்டளைக்கு தலைவணங்குவதன் மூலம் பாதுகாப்பு இருக்கும் என்பதை நாங்கள் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறோம்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் இணைக்கத்திற்கு வந்தாலேயே பாதுகாப்பு இருக்கும். ரணில் அல்லது வேறு ஒருவரைக் கொண்டு 10 அல்லது 15 இராணுவத்தினரை அருகில் வைத்துக்கொள்வதால், பாதுகாப்பு கிடைக்காது.

தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தலைமை இல்லை. கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் மகிந்த ராஜபக்ச பதுங்குகுழிக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்றார்.பசில் ராஜபக்சே எப்படி இலங்கையில் இருந்து தப்பிக்க முடியும் என்று விமான நிலையங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றார். படகில் ஏறி அகதியாக இந்தியாவுக்கு செல்ல வாய்ப்புள்ளது.

ரணில் விக்ரமசிங்கவினால், பொதுஜன பெரமுனவுக்கு தலைமை தாங்க முடியும் என எவராவது நினைத்துக்கொண்டிருந்தால், அது பைத்தியகாரத்தனம். பொதுஜன பெரமுனவின் வேலைத்திட்டங்கள் தற்போது முடிந்து விட்டது.கோத்தபய ராஜபக்சவுக்கு நடந்ததை நாம் பார்த்தோம். இப்படியே சென்றால், இதனை விட மோசமான நிலைமை ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஏற்படும். ரணிலின் செயல்பாடு காரணமாக இலங்கை உள்நாட்டுப் போரை நோக்கித் தள்ளப்படும் ஆபத்து உள்ளது.

தனி நபரின் அதிகார ஆசைக்காக முழு நாட்டையும் அழிக்க இடமளிக்க முடியாது. பொது மக்களுக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்துவது ரணிலின் திட்டம்.

முன்னிலை சோசலிசக்கட்சியின் தலைமைஅலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.