இலங்கையில் பதற்றம்...கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீச்சு!

இலங்கையில் பதற்றம்...கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீச்சு!

குடியரசுத் தலைவரையும், பிரதமரையும் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் பொதுமக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறீலங்காவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. மகிந்த ராஜபக்சே பதவி விலகி, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்று இரண்டு மாதங்கள் ஆனபோதும் இலங்கையின் நிதிநிலைமை சீரடையவில்லை. இதைக் கண்டித்தும், குடியரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வலியுறுத்தியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கொழும்பில் உள்ள களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சார்பில் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுப்புகள் வைத்து தடுக்க முயன்றனர். ஆனால் தடுப்புகளை தகர்த்தெறிந்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் பேரணியில் ஈடுபட்டனர். இதையடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பிய்ச்சி அடித்தும் போராட்டதை போலீசார் கலைத்தனர்.

இதேபோல், அதிபர் கோத்தபய ராஜபக்சவை பதவி விலகக்கோரி கொழும்பு புறக்கோட்டை பகுதியில் புத்த துறவிகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தின் போது உடல்நலம் பாதிக்கப்பட்ட  துறவி வஜிவேவ சிறிசேன மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டதால், உண்ணாவிரத போராட்டம் நடக்கும் இடத்திலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.