12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த மசோதா தொழிலாளர்களின் உழைப்புகளை சுரண்டும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டினர். மேலும், பல்வேறு தொழிற்சங்கங்களும் இதற்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் 12 மணி நேர வேலை மசோதா குறித்து தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்தது. 14 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில், திமுகவின் தொழிற்சங்கமான தொ.மு.ச. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த நிலையில், 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக அரசு எப்போதுமே தொழிலாளர்களின் தோழனாகவும், தொண்டனாகவும், காவல் அரணாகவும் விளங்கும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான அறிக்கையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதா மீது பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அதன் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்தச் சட்ட முன்வடிவு மீதான மேல்நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்க்கவும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பெருக்கவும்  சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர் நலனை பாதுகாக்கக் கூடிய பல அம்சங்கள் இந்த சட்டத்தில் இருந்தாலும், சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் இந்த 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com