கோவிலில் முதல் மரியாதைக்கு அடிதடி:  முன்னாள் அதிமுக எம்எல்ஏ மற்றும் திமுக கிளை செயலாளர் கைது! 

கோவிலில் முதல் மரியாதைக்கு அடிதடி:  முன்னாள் அதிமுக எம்எல்ஏ மற்றும் திமுக கிளை செயலாளர் கைது! 

மதுரை மாவட்டம் சந்திரப்பட்டி அருகே கோயிலில் முதல் மரியாதை அளிப்பதில் ஏற்பட்ட தகராறில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் திமுக கிளை செயலாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் சத்திரபட்டி அருகே கருவனூர் கிராமத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் அவரது குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். இவர் கடந்த 2001 - 2006 ஆம் ஆண்டு சமயநல்லூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக பதவி வகித்தார். 

இந்நிலையில் பொன்னம்பலத்தின் சொந்த ஊரான கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோவிலின் உற்சவ விழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்நிலையில், கோவிலில் மரியாதை அளிப்பதில் கருவனூர் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் தரப்பினருக்கும், முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

இதனையடுத்து வேல்முருகன் தரப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலத்தின் தரப்பினரும் மாறி மாறி தாக்க தொடங்கினர். இதில் முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம் வீட்டினுள், அவரது மனைவி பழனியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்தபோது, திடிரென வீட்டின் மீது கற்களை எறிந்து தாக்க தொடங்கி, வீட்டின் ஜன்னல்களையும், டீவி, ப்ரிட்ஜ். பைக் கார்களை உடைத்தனர். 

தொடர்ச்சியாக பொன்னம்பலத்தின் காரை பெட்ரோல் ஊற்றி எறித்ததோடு, அருகில் இருந்த வீடுகளையும் கற்களால் எறிந்து உடைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் பொன்னம்பலத்தின் உறவினரான விஜய் என்பவருக்கு அரிவாளால் வெட்டப்பட்டதில் வயிற்றில் படுகாயம் ஏற்பட்டதோடு கல்வீச்சில் பழனிக்குமார், வேல்விழி, சுப்பையா ஆகிய 4பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் . 

மேலும் மற்றொரு தரப்பான வேல்முருகன் தரப்பில், திருப்பதி என்பவருக்கும் படுகாயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவில் விழாவில் மரியாதை அளிப்பதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கார் எரிப்பு, வீடுகள் உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சத்திரபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அதனடிப்படையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து திமுக கிளை செயலாளர் வேல்முருகன் தரப்பில் திருப்பதி என்பவர் அளித்த புகாரின் கீழ் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்பம்பலம் உட்பட 20பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 8பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் ஆகிய 3பேரை சத்திரபட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதேபோன்று, இந்த மோதல் தொடர்பாக கருவனூரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலத்தின் மருமகன் பழனிக்குமார் என்பவர் அளித்த புகாரின் கீழ் கொலை முயற்சி உள்ளிட்ட 9பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கருவனூரை சேர்ந்த வேல்முருகன் , திருப்பதி உள்ளிட்ட 18பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் திமுக கிளை செயலாளர் வேல்முருகன், செந்தமிழன், ராஜமோகன் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இரு தரப்பு மோதல் காரணமாக கிராமத்தில் உள்ள ஆண்கள் ஏராளமானோர் தலைமறைவாகியுள்ள நிலையில் தற்போது கிராமத்தை சுற்றிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: நட்சத்திர ஹோட்டலின் ஊழியருக்கு, லிப்டில் ஏற்பட்ட விபரீதம்!!