வங்கி கணக்கு துவங்குவதாக கூறி 8 ஆயிரம் பேரிடம் தலா 350 ரூபாய் வசூல் செய்த தனியார் நிறுவனம்...!
வங்கி கணக்கு துவங்குவதாக கூறி சுமார் 8 ஆயிரம் பேரிடம் தலா 350 ரூபாய் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனம் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 10-க்கும் மேற்பட்டோர் கூட்டாக புகார் ஒன்றை அளித்தனர். அதில் சென்னை அண்ணா சாலை வணிக வளாகத்தில் இயங்கி வந்த Global BHP என்ற தனியார் நிறுவனத்தில் தாங்கள் அனைவரும் பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட அந்நிறுவனம் தங்களை Data Entry வேலைக்காக பணிக்கு சேர்த்து, தங்களுக்கான வங்கிக் கணக்கு துவங்க அனைவரிடமும் தலா 350 ரூபாய் வீதம் பெற்றுக்கொண்டதாகவும், அத்துடன் அனைவரது தனி நபர் விபரங்களையும் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் 2 மாதங்கள் தாங்கள் அனைவரும் அந்நிறுவனத்தில் பணிபுரிந்தும் இதுவரை தங்களுக்கான ஊதியத்தை அவர்கள் வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் தங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில், தற்போது தனியார் வணிக வளாகத்தில் இயங்கி வந்த அந்நிறுவனம் மூடப்பட்டு விட்டதாகவும், அதன் நிர்வாகிகளின் செல்போன் எண்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் தெரிவித்துள்ளனர்.