சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரத்தை சேர்ந்தவர் குருமுருகானந்தம். இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் உள்ளார். இதற்கிடையில் நேற்று மதியம் இவரது அலுவலகத்திற்கு இரண்டு டூவிலர்களில் நான்கு நபர்கள் வந்துள்ளனர்.
அதில் இருவர் கண்காணிப்பு பணியில் இருக்க, மற்ற இருவர் மட்டும் இறங்கி சென்று அலுவலகத்தினுள் புகுந்து குருமுருகானந்தத்தை சராமாரியாக வெட்டிவிட்டு அவர்கள் வந்த டூவீலரில் தப்பியோடிவிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் இச்சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
பலத்த காயமடைந்த குருமுருகானந்தம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
அந்த வழக்கிலும் சரவணன் தரப்பில் குருமுருக்கானந்தம் ஆஜரானார். மானாமதுரை கோர்ட் எதிரே நடந்த கொலை வழக்கிலும் குற்றவாளிகளுக்கு எதிராக ஆஜரானார். இதுபோன்ற பல்வேறு குற்ற வழக்குகளில் ஆஜரானதால் கூலிப்படையை வைத்து கொலை செய்ய முயற்சித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எனவே இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே இந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றத்தில் அதிபதிராஜா(23), தினேஷ்குமார்(22), ராஜாமருது(22) மற்றும் அலெக்ஸ்பாண்டியன்(21) ஆகியோர் இந்த வழக்கில் எங்களை போலீஸ் தேடுவதால் உயிர் பாதுகாப்பு கோரி நீதிபதி சூர்யபிரபா முன்னிலையில் சரணடைந்தனர். பின்னர் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தனர்.
இதையடுத்து இவர்களை திருப்பூர் சிறைக்கு போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அப்போது வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு கொடு, வழக்கறிஞர்களை தாக்கியவர்கள் மீது குண்டர் சட்டத்தின் நடவடிக்கை எடு என வழக்கறிஞர்கள் பலர் முழக்கங்கள் எழுப்பியதால் நீதிமன்ற வளாகத்தில் சலசலப்பு எழுந்தது.