பென்னாகரம் அருகே மது பாட்டில் கடத்தியவர் கைது.. 298 மது பாட்டில்கள் பறிமுதல்!!

பென்னாகரம் அருகே மது பாட்டில் கடத்தியவர் கைது.. 298 மது பாட்டில்கள் பறிமுதல்!!

பென்னாகரம் அருகே அதிக லாபத்திற்கு விற்பதற்காக இருசக்கர வாகனத்தில் 298 மது பாட்டில் கடத்தியவர் கைது செய்யப்படுள்ளார்.

ரகசிய தகவல்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் மது பாட்டில்கள் கடத்தி வந்து சந்து கடைகளில் அதிக லாபத்திற்காக விற்கப்படுவதாக பென்னாகரம் துணை காவல் கண்காணிப்பாளர் இமயவர்மனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

வாகன சோதனையில் தனிப்படை போலீசார்

தகவலின் பெயரில் குமார், பாபு, முருகன், சரவணன் ஆகிய காவல் துறையினர் கொண்ட தனிப்படை அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பென்னாகரம் அருகே உள்ள வண்ணாத்திப்பட்டி மாங்கரை சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

மது பாட்டில்கள் கடத்தல்

சோதனையில் மது பாட்டில்கள் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மது பாட்டில் கடத்தியவர் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த தேவேந்திரன் மகன் ஸ்ரீதர் வயது 30 என தெரிய வந்தது. மேலும் இவர் அதியமான் கோட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து பென்னாகரத்தில் சந்து கடைகலில் அதிக லாபத்திற்கு விற்பதும் தெரியவந்தது.

மது பாட்டில்கள் பறிமுதல்

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பென்னாகரம் காவல் துறையினர் மதுபாட்டில் கடத்தி வந்த ஸ்ரீதரை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் அவரிடம் இருந்து 298 மது பாட்டில்கள் மற்றும் ஸ்கூட்டி பறிமுதல் செய்தனர்.