அதிமுக கவுன்சிலர் மீது ரவுடி கும்பல் வெறிச்செயல்!

செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கத்தில் அதிமுக கவுன்சிலர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ரவியின் இரண்டாவது மகன் அன்பரசு. இவர் வார்டு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார். கீரப்பாக்கம் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் உயிரிழந்த நிலையில் அவரின் படத்திறப்பு விழாவுக்கு அன்பரசு சென்றதாக தெரிகிறது.  

படத் திறப்பு முடிந்ததும் தனது நண்பர்கள் 7 பேருடன் காரில் சென்று அங்குள்ள மைதானத்தில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு மறைந்திருந்த ஒரு ரவுடி கும்பல் அன்பரசுவின் கார் மீது  இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் கார் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது.

இதனைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் நாலா பக்கமும் சிதறி ஓடிய நிலையில், துரத்திச் சென்ற ரவுடிகள்  அதிமுக பிரமுகர் அன்பரசுவை  ஓட ஒட விரட்டி  வெட்டியதாக கூறப்படுகிறது

இதில் அன்பரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததையடுத்து அந்த ரவுடி கும்பல் அங்கிருந்து  தப்பிச் சென்றுள்ளது. அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.

தகவல் அறிந்த மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் திருப்போரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காயார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்பரசன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து  வழக்கு பதிவு செய்த போலீசார் ரவுடி கும்பலை தேடி வருகின்றனர்.  முன்விரோதம் காரணமாக இருக்குமா அல்லது வேறு ஏதேனும் காரணமா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.