
சென்னை அம்பத்தூரில் செயல்பட்டுவரும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு, நேற்று அம்பத்தூர் ரயில் நிலையத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் டெல்லி பாபு, உதவி ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அம்பத்தூர் ரயில் நிலையம் விரைந்தனர்.
கையில் பையுடன் அங்கும் இங்குமாக சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை நோட்டமிட்ட போலீசார் அங்கு வந்த ரயிலில் ஏரிய அவரை பின்தொடர்ந்து சென்றனர். பின்னர் அவர் பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிய போது சுதாரித்துக் கொண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
பிறகு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், அவர் புரசைவாக்கம் சுந்தரம் லியோன் தெருவை சேர்ந்த அபிஷேக் (40) என்பதும், அவரிடமிருந்த பையில் சுமார் 89 லட்சம் ஹவாலா பணம் இருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வருமானவரித்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது எடுத்து பிடிபட்ட நபர் மற்றும் 89 லட்ச ரூபாய் பணத்தை அவர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வருமானவரித்துறை போலீசார் இந்த பணம் யாருடையது, பணத்தை அவர் எங்கு கொண்டு செல்கிறார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.